தமிழ்நாட்டில் 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியின் போது கச்சத்தீவை மீட்க என்ன செய்தீர்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். கச்சத்தீவு மீட்பு தொடர்பாக 54 முறை கடிதம் எழுதியதாக கூறியுள்ள மு.க.ஸ்டாலின், டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த போதாவது கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக வலியுறுத்தினீர்களா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இலங்கை கடற்படையால் மீனவர்கள் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வரும் நிலையில், கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வாக அமையும் என்றும், இந்தியா – இலங்கை இடையிலான ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து கச்சத்தீவை திரும்பப் பெறவும் மத்திய அரசு வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்திற்கு பாமக, பாஜக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. இதனிடையே கச்சத்தீவு மீட்பு தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
அப்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், திமுக ஆட்சி அமைந்து 4 ஆண்டுகளில் இந்த அரசு கச்சத்தீவு விவகாரத்தில் என்ன செய்தது? தமிழக எம்பி-க்கள் 39 பேர் நாடாளுமன்றத்தில் என்ன வலியுறுத்தியுள்ளனர்? அதனை முதலமைச்சர் விளக்க வேண்டும். 14 ஆண்டுகள் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக என்ன செய்தது? வாஜ்பாய் அரசில் கூட அங்கம் வகித்தீர்கள். அப்போது ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நான் பலமுறை பிரதமரை பார்த்த போது வலியுறுத்தியுள்ளேன். 54 முறை கடிதம் எழுதி இருக்கிறேன். தொடர்ந்து அழுத்தம் கொடுத்திருக்கிறோம். நீங்கள் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தீர்கள். அப்போது என்ன செய்தீர்கள்? இப்போது கூட டெல்லி சென்று வந்தீர்கள்? அப்போது வலியுறுத்தப்பட்டதா? என்று பதிலடி கொடுத்தார். இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பேசுகையில், இது உணர்வுப்பூர்வமான பிரச்சனை. நமது உரிமையை மீட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், கச்சத்தீவை மீட்கக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு அளித்தது.