கச்சத்தீவு மீட்பு தீர்மானம்.. திமுகவின் கபடநாடகம்: அண்ணாமலை!

கச்சத்தீவை மீட்கக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது கபடநாடகம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

கச்சத்தீவை மீட்பதன் மூலமாக மட்டுமே தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்தியில் தொடர்ந்து 3வது முறையாக ஆட்சிக்கு வந்த போதும், கச்சத்தீவை மீட்க பாஜக ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுக்கவில்லை. தற்போது இலங்கை செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, கச்சத்தீவை மீட்பதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதனால் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணம் கூடுதல் கவனம் பெற்றுள்ளது. இந்த தீர்மானத்திற்கு சட்டசபையில் பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் கபடநாடகம் என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

சீர்குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கு, குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள், அதிகரித்து வரும் பட்டியல் சமூக மக்களுக்கெதிரான வன்முறைகள் என தமிழ்நாடு இதுவரை இல்லாத மோசமான இருண்ட காலத்தில் இருக்கும்போது, நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு என்று நாடகமாடிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். மீனவர்கள் பிரச்சனை அவரது இன்றைய நாடகம், கச்சத்தீவு மீட்புத் தீர்மானம். கடந்த 20 ஆண்டுகளில் இலங்கை அரசால் ஆயிரக்கணக்கான இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து பல துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதற்குக் காரணம், இன்றைய முதலமைச்சர் ஸ்டாலினின் தந்தை மறைந்த கருணாநிதி.

1974ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக கருணாநிதி இருந்தபோது, மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸுடன் சேர்ந்து, கச்சத்தீவு மீதான உரிமையை விட்டுக் கொடுத்ததுதான் காரணம். கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுக்க முழு சம்மதம் தெரிவித்துத் தமிழக மீனவ மக்களுக்குத் துரோகம் செய்ததோடு, கடந்த ஐம்பது ஆண்டுகளாக, ஒவ்வொரு தேர்தலின் போதும், தமிழக மீனவர்கள் பாதுகாப்பு, தமிழர்கள் உரிமை, என்றெல்லாம் நாடகமாடிக் கொண்டிருக்கிறது திமுக. கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்தது, மறைந்த பிரதமர் இந்திரா காந்தி ராஜதந்திரம் என்று கூறினார் தமிழகக் காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை. தமிழக மீனவ மக்களுக்குச் செய்த துரோகம், உங்களுக்கு ராஜதந்திரமா? காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்த பிறகு, பல முறை மத்திய அரசில், பசையான அமைச்சர் பதவிகளை மட்டும் வாங்கிக் கொண்டு, கச்சத்தீவு விவகாரத்தில் கள்ள மௌனம் மட்டுமே சாதித்துக் கொண்டிருந்தது திமுக.

கடந்த 40 ஆண்டுகளில் மத்திய அமைச்சரவையில் பங்கு வகித்தபோது, கச்சத்தீவை மீட்க என்ன நடவடிக்கை எடுத்தது திமுக? இலங்கைப் போரின்போது, திமுக நடத்திய மூன்று மணி நேர உண்ணாவிரதம் உள்ளிட்ட கபட நாடகங்களை மக்கள் மறந்து விட்டார்கள் என்று ஸ்டாலின் நினைத்துக் கொண்டிருக்கிறார். திமுக – காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது, இலங்கை ராணுவத்தால் 80க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டபோது, மத்திய அமைச்சர்களாக இருந்து ஊழல் செய்வதில் மட்டுமே மும்முரமாக இருந்த திமுக.

கடந்த 2014 ஆம் ஆண்டு, இலங்கை அரசால் தமிழக மீனவர்களுக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட போது, அவர்களை பத்திரமாக மீட்டது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு. பிரதமராக மோடி பொறுப்பேற்ற பிறகு, இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்படும் மீனவர்கள், உடனுக்குடன் மீட்கப்படுகிறார்கள். திமுக – காங்கிரஸ் கூட்டணி மீனவர்கள் உயிருக்கு எந்த ஆபத்தும் நேராமல், சட்டப்பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவும், நமது மீனவ சகோதரர்களுக்கு உறுதுணையாக நிற்கிறது. கச்சத்தீவை விட்டுக் கொடுத்து, 50 ஆண்டுகள் மௌனமாக இருந்து, தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தைப் பாதிப்புக்குள்ளாக்கிவிட்டு, தேர்தல் நேரத்தில் மட்டும் கச்சத்தீவு மீட்போம் என்று கபட நாடகம் ஆடும் ஸ்டாலின் மற்றும் திமுக காங்கிரஸ் கூட்டணியை மக்கள் நம்பப் போவதில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.