முதலமைச்சருக்கு செலெக்ட்டிவ் அம்னீஷியா: ஆர்பி உதயகுமார்!

தமிழக சட்டமன்றம் ஜனநாயக மன்றமாக இல்லாமல் ஸ்டாலின் மன்றமாக உள்ளது எனவும், நீட் பிரச்சனையில் முதலமைச்சரும், துணை அமைச்சரும் செலெக்ட்டிவ் அம்னீஷியா பிரச்சினையில் உள்ளார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கூறியுள்ளார்.

மதுரையில் அதிமுக மாணவரணி சார்பில் இளம் பேச்சாளர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சரும், அம்மா பேரவை செயலாளருமான ஆர்பி உதயகுமார் கலந்து கொண்டு இளம் பேச்சாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். முன்னதாக அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஸ்டாலின் திமுக அரசு, தமிழ்நாட்டு மக்களிடத்தில் தன்னுடைய நிலையை இன்றைக்கு மூடி மறைத்து ஒரு பொம்மலாட்டத்தை நடத்திக் கொண்டிருப்பதை மக்கள் விழிப்போடு அதை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

நான் சொல்வது உண்மைக்கு மாறான செய்தி அல்ல. நடக்கின்ற நிகழ்வுகளை உங்கள் கவனத்தில் கொண்டு வருகிற அந்த தார்மீக உரிமை உள்ளது. தமிழ்நாடு சட்டமன்றம் ஜனநாயக மன்றம் என்று இருந்த நிலை மாறி ஸ்டாலின் மன்றம் என்கிற ஒரு நிலை இந்த நூற்றாண்டில் ஏற்பட்டிருப்பது நமக்கெல்லாம் வெட்கி தலைகுனிய வேண்டிய ஒரு நிலையை நாம் பார்க்கிறோம். நூற்றாண்டு கண்டிருக்கின்ற தமிழ்நாடு சட்டமன்றம் எத்தனை பிரதிவாதங்கள் விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டு தமிழ்நாட்டு மக்களுக்கு தீர்வு கிடைத்திருக்கிறது.

இந்தியாவிலேயே எத்தனை மாநிலங்கள் இருந்தாலும் முதன் முதலாக இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை இட ஒதுக்கீடுக்காக முதல் திருத்தம் அது தமிழ்நாட்டிலே இட ஒதுக்கீடுக்காக உருவாக்கப்பட்டது. 69 சதவீத இட ஒதுக்கீட்டை புரட்சித்தலைவி அம்மா சட்ட மசோதாவை நிறைவேற்றி இந்தியாவிற்கே சமூக நீதி கற்றுத் தந்தார். இதற்கு வீரமணி அவர்கள் சமூக நீதி காத்த வீராங்கனை என்று பாராட்டி பேசியதை நாம் மறக்க முடியாது.

முல்லைப் பெரியாருக்கு தீர்வு காண இதே சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதை விவாதித்து 2014 ஆண்டில் முல்லைப் பெரியாறு அணையை 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெற்று தந்தார். அதேபோல 50 ஆண்டு காவிரி பிரச்சனைக்கும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார் அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெற்று தந்தார். காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி விவசாயிகளுக்கு பாதுகாப்பை வழங்கினார்.

அதேபோன்று அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவக் கனவை நினைவாக்கும் வண்ணம் 7.5 சகவீத இட ஒதுக்கீட்டை சட்டமாக நிறைவேற்றி ஆளுநர் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க காலதாமதம் என்று கிடப்பில் போடாமல் முதலமைச்சருக்கு உள்ள இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் அதிகாரத்தை பயன்படுத்தி அந்த சட்டத்தை நிறைவேற்றினார் எடப்பாடி பழனிசாமி. இதுபோன்று அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தமிழகத்தில் சமூக நீதிக்காக, நீர் மேலாண்மைக்காக, கல்விக்காக, பொருளாதாரத்திற்காக, வேலை வாய்ப்புக்காக இப்படி அனைத்து நிலைகளிலும் மக்களின் பாதுகாப்புக்காக, மக்களுடைய மேம்பாட்டுக்காக, மக்களின் முன்னேற்றத்திற்காக, மொழிக்காக, இனத்திற்காக பண்பாட்டுக்காக, நாகரிகத்திற்காக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

தற்போது சட்டமன்றத்தின் நிலை என்ன? அங்கே ஜனநாயகம் எங்கே போனது? எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் சட்ட ஒழுங்கு குறித்து, மக்களை பாதுகாக்கும் காவல்துறை அலுவலர்களே குண்டர்களால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்படுகிறார்கள் அதை அரசின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டாமா? இன்றைக்கு கருத்து சுதந்திரத்திற்கு மிகப்பெரிய பேராபத்து வந்திருக்கிறது. தீர்மானம் கொடுத்து பத்து நாட்களாக போராடுகிறோமே? அது குறித்து கவனத்தில் பேச வேண்டாமா?

கச்சத்தீவை தாரைவார்த்து விட்டு என்று நாடகம் நடத்துகிறீர்களே? நிதி அமைச்சர், முதலமைச்சரை பார்த்து ஞானப்பால் குடித்த திருஞானசம்பந்தர் என்று பாராட்டு உரையை மட்டும் சட்டமன்ற பதிவினை வைத்துக் கொண்டால் வருகிற இளைய தலைமுறைக்கு என்ன செய்தி சொல்ல நீங்கள் வருவீர்கள்? சட்டசபையில் இன்றைக்கு திமுக நடத்துகிற நாடகங்களுக்கு மேடையாக இன்றைக்கு பயன்படுத்தப்படுகிறது. அவர்கள் போடுகிற இரட்டை வேடத்திற்கு திமுக சட்டமன்ற மேடையாக பயன்படுத்துவது நியாயமா?

இன்றைக்கு, முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் நீட் தேர்வு பிரச்சினையிலே செலெக்டிங் அமனீஷியா நோய் இருக்குமோ என்று தமிழ்நாட்டு மக்கள் அச்சப்படுகிறார். நேற்றைய தினம் சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு ஒரு அறிவிப்பை கொடுக்கிறார் முதலமைச்சர் அவர் இந்த அறிவிப்பு கொடுப்பது என்ன பலனை இந்த மக்களுக்கு கொடுக்கப் போகிறது. அவருடைய வசதிகளுக்கு வேண்டுமானால் மறந்து இருக்கலாம்

ஆனால் 2021 ஏப்ரல் 4 தேதி எக்ஸ் தளத்தில் அன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின், கல்வியில் சம வாய்ப்பு பறிக்கும் அல்லது கல்வியில் சம வாய்ப்பை பறிக்கும் நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க திமுக நடவடிக்கை எடுக்கும்படி சொன்னார். அதேபோன்று 2021 செப்டம்பர் 11 சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் நீட் தேர்வு என்பது ஏழை எளிய பின்தங்கிய மாணவர்களுக்கு எதிரானது சமூக நீதிக்கு தடையாக உள்ளது, நீட் தேர்வில் இருந்து தமிழ் இனத்திற்கு விலக்கு பெறுவதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்று கூறினார்.

அதை போன்று 2025 ஜனவரி 10ஆம் தேதி சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி நீட் தேர்வு பற்றி நீங்கள் பேசியதே உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? நீங்கள் தேர்தல் வாக்குறுதியாக கொடுத்தது என்ன ஆயிற்று? எத்தனை குழந்தைகளை இதுவரை இழந்து கொண்டே இருக்கிறோம். நாம் நம்முடைய பிள்ளைகளை நாம் இழப்பதை எப்போது நீங்கள் தடுக்க போகிறீர்கள்? ஆதாரத்தோடு எடுத்து வைக்கின்ற போது, முதலமைச்சர் மத்திய அரசு தான் நீட் தேர்வில் ரத்து செய்ய முடியும் மாநில அரசால் ரத்து செய்ய முடியாது. இன்றைக்கு கூட்டணி ஆட்சிக்கு வந்திருந்தால் நிச்சயமாக நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டிருக்கும். இதை எவ்வளவு முன்னுக்கும், பின்னுக்கும் முரணான பேச்சு என்பதை தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மத்திய அரசு ரத்து செய்ய முடியும் மாநில அரசு ரத்து செய்ய முடியாது என்று நீங்களே சொல்லுகிறீர்கள் பிறகு எதற்கு அனைத்து கட்சி கூட்டம் யாரை ஏமாற்றுவதற்கு? உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் அதற்கான ரகசியம் என்னிடம் உள்ளது என்று சொன்னாரா? இல்லையா? அதே போன்று 2023 மார்ச் 13 அரியலூரில் உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வு ரத்து செய்யும் வரை போராடுவோம் என்பதையே நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியம் என்னிடம் உள்ளது என்று கூறினேன் என்று சொல்வது வெட்கக்கேடாக இல்லையா?

பிரதமர் மோடியை சந்தித்தபோது நீட் தேர்வு ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்தேன் இது தான் ரகசியம் என்று முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார். மாணவர்கள், பெற்றோர்கள் வைத்த நம்பிக்கைக்கு அவர்கள் முற்றிலும் துரோகம் செய்து இருக்கிறார்கள் முதலமைச்சர், துணை முதலமைச்சர் துரோகம் செய்திருக்கிறார் என்று தான் இதை பார்க்க முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.