பேரவைத் தலைவர் அப்பாவு ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்கிறார்: எடப்பாடி பழனிசாமி!

சட்டப்பேரவையில் பேச அனுமதி மறுப்பதாகக் கூறி அதிமுக உறுப்பினர்கள் இன்று பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

தமிழக சட்டபேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று(செவ்வாய்க்கிழமை) சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியான அதிமுக உறுப்பினர்கள் பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கூறி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் கறுப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர்.

இதன்பின்னர் சட்டப்பேரவைக்குச் சென்ற நிலையில், அதிமுக உறுப்பினர்களை பேச அனுமதி கோரியும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கூறி அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

பேரவைத் தலைவர் அப்பாவு ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்கிறார். அவையின் மரபுப்படி எதிர்க்கட்சித் தலைவருக்கு பேச வாய்ப்பளிக்க வேண்டும். எதிர்க்கட்சியான அதிமுகவுக்குதான் முதலில் பேச வாய்ப்பு தர வேண்டும். ஆனால் திமுக கூட்டணி கட்சியினருக்கு எல்லாம் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

அதேபோல, கூட்டணிக் கட்சியினர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து பேசும்போது நேரலை செய்கிறார்கள். அதிமுக உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து பேசும்போது நேரலை செய்வதில்லை. நேற்று விஜயபாஸ்கர் பேசும்போது நேரலை செய்யவில்லை. நாங்கள் மக்கள் பிரச்னையைத்தான் பேரவையில் பேசுகிறோம். ஏன் வாய்ப்பு மறுக்கப்படுகிறது? அவைத் தலைவர் ஒருதலைபட்சமாக நடந்துகொள்வது ஏன்?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.