முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் காங்கிரஸ் தேசிய மாநாடு நடைபெறுகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், காங்கிரஸ் நாடாளுமன்றக்கட்சித் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகள், மாநிலத் தலைவர்கள், காங்கிரஸ் சிறப்பு அழைப்பாளர்கள் என நாடு முழுவதிலும் இருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். இதில், தமிழகத்திலிருந்து காங்கிரஸ் அக்கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் பங்கேற்றிருந்தார்.
அவர் சபர்மதி ஆசிரமத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்த நிலையில், திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மயங்கி விழுந்த அவரை, கட்சி தொண்டர்கள் மருத்துவமனை கொண்டு சென்று சேர்த்தனர். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்துனர்.
இந்நிலையில் தான் தப்போது நன்றாக இருப்பதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
அதிக வெப்பம் காரணமாக, எனக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டது. அனைத்து பரிசோதனைகளும் நார்மலாக உள்ளது. நான் இப்போது முழுமையாக நலமாக இருக்கிறேன். அனைவருக்கும் நன்றி. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதீத வெப்பம் மற்றும் நீரிழப்பு காரணமாக ப. சிதம்பரம் மயங்கியதாகவும் அவருக்கு இப்போது தொடர்ந்து சிகிச்சை தரப்பட்டு வருவதாக கார்த்தி சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில் மேலும், “என் தந்தை ப. சிதம்பரம் அகமதாபாத்தில் கடுமையான வெப்பம் மற்றும் நீரிழப்பு காரணமாக மயக்கம் அடைந்தார். அவர் இப்போது ஜைடஸ் மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளார். மருத்துவர்கள் அவரது உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர். இப்போது அவரது உடல்நிலை இயல்பாகவே இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.