ஆளுநர் பொறுப்பில் இருந்து ஆர்.என்.ரவியை விடுவிக்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்!

உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:-

உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகளின் அமர்வு அளித்த தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு. முழுக்க, முழுக்க ஆளுநர் செய்தது சட்டவிரோதம், அவருடைய அதிகாரத்தை தாண்டி அவள் செயல்பட்டு இருக்கிறார் என்று தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது. மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 12 மசோதாவை 3 ஆண்டுகளாக கிடப்பில் போட்டுள்ளார். ஒப்புதல் வழங்குவதற்கான, காலக்கெடுவையும் தீர்மானித்து உள்ளனர் நீதிபதிகள். ஆளுநர் அதிகாரத்தை மீறி செயல்பட்டு இருக்கிறார் என்பதற்கான தீர்ப்பு இது. இது சம்பந்தமாக தமிழக அரசு உச்சநீதிமன்ற நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தீர்ப்பில் எதிர்காலத்தில் ஆளுநர்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளது. ஆளுநரும், குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்க மறுத்த 10 மசோதாவிற்கும் உச்ச நீதிமன்றமே ஒப்புதல் வழங்கியுள்ளது. தீர்ப்பு கூறப்பட்ட தினத்தில் இருந்து சட்டமாக்கப்படும் என்பது மிகவும் வரவேற்கத்தக்கது.

சிறப்பான தீர்ப்பை பெற்ற தமிழக முதல்வருக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பாக உள்ளது. மத்திய அரசும், ஆளுநரும் தீர்ப்பு பற்றி ஒன்றும் கூறாமல் அமைதியாக உள்ளனர். உச்ச நீதிமன்றம் ஆளுநர் சட்ட வரம்பை மீறி நடந்துள்ளார் என்று தெரிவித்து உள்ள நிலையில், ஆளுநர் பொறுப்பில் இருந்து உடனடியாக ரவியை விடுவிக்க வேண்டும். மத்திய அரசு அவரை திரும்ப பெற வேண்டும். இதுதான் உச்ச நீதிமன்றத்துக்கு மரியாதை கொடுக்கிற விஷயமாக இருக்கும்.

ஒன்றிய அரசு வக்பு சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நள்ளிரவு 2 மணிக்கு மேல் நிறைவேற்றி உள்ளது. இதன் மூலம் இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய இஸ்லாமிய மக்கள் ஆயிரம் ஆண்டுகளாக, இந்த மக்கள் தங்களுடைய இறைவன் மீது நம்பிக்கை வைத்து, சொத்தை வக்பு சொத்து என்று அளிக்கிறார்கள். இந்த வக்பு சட்டத்தை நசுக்கும் விதமாக தற்பொழுது மத்திய அரசு இந்த சட்டத்தை திருத்தி உள்ளது. வக்பு போர்டில் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி இந்துக்களையும் உள்ளே புகுத்துகிறது.

வக்பு சொத்துக்களை முழுவதுமாக கைப்பற்றுவது, இஸ்லாமிய மக்களுக்கு இருக்கிற ஆன்மிகப் பணியை மோசமான நிலைக்கு கொண்டு செல்லவே இந்த சட்டத் திருத்தம். நாடு முழுவதும் இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் அரசு இந்த சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி உள்ளது. இதேபோன்று கேரளா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பப்பட்டுள்ளது.

வக்பு சட்ட திருத்தத்தைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரும் 17-ம் தேதி தமிழக முழுவதும் கண்டன இயக்கங்கள் நடைபெற உள்ளன. மத்திய அரசு சிலிண்டர் எரிவாயு விலையை உயர்த்தி உள்ளது. இது கண்டனத்துக்கு உரியது. தமிழ் மீது அவ்வளவு அக்கறை கொண்டுள்ள பிரதமர் ஏன் தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க வில்லை. இன்றும் இந்தி மட்டும்தான் ஆட்சி மொழியாக உள்ளது. அதற்கான சட்ட திருத்தத்தை கொண்டு வர முடியுமா. தமிழகத்துக்கு வரும்போது மட்டும் பிரதமர் தமிழைப் பற்றி பேசி நாடகம் ஆட வேண்டாம்.

நீண்ட காலமாக இருக்கக்கூடிய அரசு ஊழியர், ஆசிரியர், போக்குவரத்து ஊழியர் பிரச்சனையை பேசி சுமுகமான தீர்வு காண வேண்டும். போக்குவரத்து தொழிலாளருக்கு கிட்டத்தட்ட 8 ஆண்டுகளாக கொடுக்க வேண்டிய அகவிலைப்படி நிலுவையில் உள்ளது. எனவே அனைத்தும் நிறைவேற்றிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.