ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை: ராம சீனிவாசன்!

”தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைக்க இருக்கும் திமுக அல்லாத புதிய அரசுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து விட்டு தான் செல்வார். அதுவரை அவரை மாற்றுவது என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று பாஜக பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் கூறியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் பாஜக திண்டுக்கல் மேற்கு மாவட்ட அலுவலகத்தை இன்று (ஏப்.9) புதன்கிழமை காலை, அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் திறந்து வைத்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மக்களின் கோபத்தை, ஆத்திரத்தை தேர்தல் நேரத்தில் பணம் கொடுத்து சரிசெய்துவிடலாம் என்ற திமுகவின் அணுகுமுறை 2026 தேர்தலில் பலன் அளிக்காது.

வக்பு சட்ட திருத்தம் என்பது வரலாற்று திருப்புமுனை. வக்பு சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்று சிலர் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் இந்த சட்டத்தை ஆதரித்து இருக்கிறார். இந்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்றால், இஸ்லாமியர்களின் ஒரு பிரிவினர் எப்படி ஆதரவளிப்பர்?. பல இஸ்லாமிய தலைவர்கள் கேட்டுக் கொண்டதனால் தான் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. வக்பு சொத்துக்களை அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களே கபளீகரம் செய்வதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த சட்டம் வக்பு சொத்துக்களை சில தனிநபர்கள் சொந்தம் கொண்டாடுவதை அனுமதிக்காது. இது இஸ்லாமியர்களுக்கு மிகப்பெரிய நற்செய்தி. இதனை புரிந்து கொண்டால் ஒவ்வொரு இஸ்லாமியரும் இந்த சட்டத்தை பாராட்டுவார்கள். இந்த சட்டம் வக்பு சொத்தை தனி நபர்கள் ஆக்கிரமிப்பதை தடுத்து இருக்கிறதோ, அதேபோல் இஸ்லாமியர் அல்லாத இந்துக்கள், கிறிஸ்தவர்களுடைய சொத்துக்களை, நிலத்தை, கோயில் சொத்துக்களை வக்பு வாரியமும் சொந்தம் கொண்டாட முடியாது.

கேரளாவில் கிறிஸ்தவ அமைப்புகள், தேவாலயங்களில் வக்பு சட்ட திருத்த மசோதாவை விழாவாக கொண்டாடி வருகின்றனர். இஸ்லாமியர்கள் சொத்துக்கள் சில தனிநபர்களின் கைகளுக்கு செல்வதை தடுக்கவும், இஸ்லாமியர் அல்லாதவர்களின் சொத்துக்களை வக்பு வாரியம் சொந்தம் கொண்டாடுவதை தவிர்க்கவும் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

ராமேசுவரத்துக்கு பிரதமர் மோடி வந்த போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரை வரவேற்காமலும், பாம்பன் பாலம் மற்றும் ரூ.8,000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தமிழகத்துக்கு பிரதமர் அர்ப்பணிக்கும் நிகழ்வில் முதல்வர் பங்கேற்காமலும் புறக்கணித்து, தமிழக மக்களுக்கு திமுக அரசு செய்தது மிகப்பெரிய துரோகம். தன்னால் ஒரு விசயத்தை செய்ய முடியாது என்றால் எதிர்க்கட்சி கூட்டம் நடத்துவது முதல்வர் ஸ்டாலின் பழக்கம். தன்னால் செய்ய முடிந்ததை திமுக மட்டுமே செய்ததாக முதல்வர் காட்டிக் கொள்வார். தமிழக பாஜகவின் மகத்தான, வீரியமிக்க இளம் தலைவர் அண்ணாமலை கட்சிக்கு தொடர்ந்து பயன்பட்டு வருவார். அண்ணாமலை தேசத்துக்கு கிடைத்த சொத்து. அவருக்கான எதிர்காலம் பிரகாசமாக இருக்கும். அவரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை கட்சி தான் முடிவு செய்யும்.

பல்கலைக்கழகங்களில் வேந்தராக முதல்வர் தான் இருக்க வேண்டும் என்று ஸ்டாலின் மசோதா கொண்டு வந்தார். இதே மசோதாவை தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் கொண்டு வந்தார். அப்போது, பேராசிரியர் அன்பழகன், ஜெயலலிதா செய்தது முட்டாள்தனம் என்று கூறினார். அது முட்டாள்தனம் என்றால், தற்போது ஸ்டாலின் சொல்வது என்ன? என்பதை திமுக தான் விளக்க வேண்டும்.

ஆளுநர் விவகாரத்தில் மத்திய அரசு தேவை என்றால் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து முழு விளக்கம் கேட்கும். ஆளுநரை கட்டுப்படுத்துகின்ற இந்த தீர்ப்பு, குடியரசு தலைவரையும் கட்டுப்படுத்துமா? என்று விளக்க கேட்கும். தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைக்க இருக்கும் திமுக அல்லாத புதிய அரசுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து விட்டு தான் செல்வார். அதுவரை அவரை மாற்றுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.