பாஜகவுடன் பகை ஏற்பட்டுவிடும் என்பதற்காகவே, நீட் தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பழனிசாமி புறக்கணித்துள்ளார். இவற்றுக்கு பாஜகவின் நிர்பந்தமே காரணம் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் நாகையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:-
அகில இந்திய விவசாயிகள் சங்க மாநாடு வரும் 15, 16, 17-ம் தேதிகளில் நாகையில் நடைபெற உள்ளது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, தமிழக அமைச்சர்கள் எம்ஆர்கே.பன்னீர்செல்வம், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கேரள மாநில அமைச்சர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
பாஜகவின் நிர்பந்தம் காரணமாகவே தமிழக அரசுக்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசி வருகிறார். தமிழக ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அனைவரும் வரவேற்ற நிலையில், அதிமுக மட்டும் செய்வதறியாது திகைத்து, அமைதியாக உள்ளது. பாஜகவுடன் பகை ஏற்பட்டுவிடும் என்பதற்காகவே, நீட் தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பழனிசாமி புறக்கணித்துள்ளார். இவற்றுக்கு பாஜகவின் நிர்பந்தமே காரணம். தமிழகத்தில் காலூன்ற முடியாது என்பதால் சீமானை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.