அரசு நிகழ்ச்சிகளுக்கு பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிகழ்ச்சிக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாக ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மாவட்ட சுகாதார அலுவலர் இதை மறுத்துள்ளார். இந்தநிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதிய மருத்துவ கட்டிடங்கள் பணிகள் முடிவடைந்ததும் திறப்பு விழாவிற்கு காத்திருக்காமல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது வழக்கம். அந்தவகையில், கன்னியாகுமரியில் ரூ.7.35 கோடி மதிப்பில் 15 புதிய மருத்துவ கட்டிடங்களும், நாளை (வெள்ளிக்கிழமை) தென்காசியில் ரூ.9.02 கோடி செலவில் 16 புதிய மருத்துவ கட்டிடங்களும் திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட இருந்தது. இந்தநிலையில், இன்று ஊடகங்களில் ஒரு செய்தி ஒளிபரப்பானது. அதில் பங்குனி உத்திரம் தென்காசியில் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சி, மருத்துவ கட்டிடங்கள் திறப்பு விழாவில் கலந்து கொள்ள முடியாது என்று கூறப்பட்டிருந்தது. எனவே, தென்காசி மாவட்டத்தில் நடைபெற இருந்த புதிய மருத்துவ கட்டிடங்கள் திறப்பு விழா வேறு ஒரு நாள் அறிவிக்கப்பட்டு நடைபெறும்.
இதேபோல, அரசு நிகழ்ச்சிகளுக்கு பணம் வசூலிக்கப்படுகிறது என்ற செய்தி பற்றிய உண்மைதன்மை அறிய பொது சுகாதாரத்துறை இயக்குனர், இணை இயக்குனர் தலைமையில் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணையின் அடிப்படையில் தவறு செய்தது உண்மை என கண்டறியப்பட்டால், தவறு செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.