அம்பேத்கர் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்!

அம்பேத்கரின் 135 வது பிறந்தநாளையொட்டி, சென்னை பாலவாக்கத்தில் உள்ள அவரின் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் அம்பேத்கரின் சிலைகளுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த சூழலில், சென்னை பாலவாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தவெக தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதுகுறித்து தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது:-

நமது தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னை, பாலவாக்கத்தில் உள்ள அவரது திருவுருவச் சில சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். சட்ட உரிமைகள் மட்டுமில்லை, சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவையும் அனைவருக்குமானவை என்பதை வலியுறுத்தி, தமது வாழ்நாளை மக்களுக்கு அர்ப்பணித்த அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளில் அவரைப் போற்றி வணங்குவோம். நம் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் நீங்கி, சமத்துவம் என்றும் நிலைத்திட உறுதி ஏற்போம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

வழக்கமாக தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாளுக்கு பனையூரில் உள்ள அலுவலகத்தில் மரியாதை செலுத்தி வந்த விஜய் முதன்முறையாக வெளியில் வந்து மரியாதை செலுத்தியுள்ளார். 2 நாட்களுக்கு முன்பு, அம்பேத்கரின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று கட்சியினருக்கு விஜய் அறிவுறுத்தியிருந்தார். இந்த நிலையில் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை பாலவாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்திய போட்டோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.