சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் ஸ்டாலினை மநீம தலைவர் கமல்ஹாசன் சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த கமல்ஹாசன், முதல்வரை கொண்டாடுவதற்காக வந்ததாக தெரிவித்தார்.
தமிழக ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் பெற்ற வெற்றி, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானம், மற்றும் மாநில சுயாட்சி தொடர்பாக நேற்று முன்மொழியப்பட்ட தீர்மானம் குறித்து முதல்வரை சந்தித்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
முன்னதாக முதல்வரை சந்திக்க வந்த கமல்ஹாசனிடம், முதல்வருக்கு நன்றி தெரிவிக்க வந்தீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கமல்ஹாசன், “Celebrating CM” என ஆங்கிலத்தில் பதில் அளித்தார்.
முதல்வர் உடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “ராஜ்யசபா சீட்டுக்காக நன்றி தெரிவிக்க வந்தீர்களா என செய்தியாளர்கள் கேட்டார்கள். சீட் முடிவு செய்யப்பட்டு கட்சியில் முடிவு செய்து அறிவிக்கும்போது நன்றி சொல்ல வருவோம். இப்போது வந்திருப்பது கொண்டாடுவதற்காக. இந்த தீர்ப்பு, உச்சநீதிமன்ற ஆளுநர் வழக்கில் முதலமைச்சருக்கு கிடைத்த வெற்றிக்கு பாராட்டு சொல்ல வந்தேன். நமக்கு சாதகமானது என்பதை விட இந்தியாவிற்கு சாதகமானது. இந்த தீர்ப்பு இவர்கள் போட்ட வழக்கில் வந்திருக்கிறது என்பதால் கொண்டாடப்பட வேண்டியவர் முதல்வர். தேசிய அளவில் இந்த வெற்றியைக் கொண்டாட வேண்டும்” என்றார்.
தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் வரும் ஜூலையில் நிறைவடைகிறது. கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்த மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கப்பட்டது. 2019 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு மக்களவைத் தொகுதி, ஒரு மாநிலங்களவை இடம் என கூட்டணி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 2024 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் ஒரு மக்களவைத் தொகுதி மட்டுமே மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. எனவே, ஜூலையில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடையும் நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது. மக்கள் நீதி மய்யம் சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிடவே வாய்ப்பு அதிகம். இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்தார் கமல்ஹாசன்.