வன்னியர் சங்க மாநாடு யாருக்கும் எதிரானது கிடையாது: அன்புமணி!

வன்னியர் சங்க மாநாடு யாருக்கும் எதிரானது கிடையாது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கானது எனவும், பட்டியல் இன சகோதரர்கள் உட்பட அனைத்து சமுதாய மக்களும் இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

12 ஆண்டுகளுக்குப் பிறகு வன்னியா் சங்கம் சாா்பில் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் வருகிற மே 11-ஆம் தேதி நடைபெறவுள்ள சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞா் பெருவிழா மாநாடு நடைபெற உள்ளது அதனை ஒட்டி இன்று முகூர்த்த பந்த கால் நடும் விழா நடைபெற்றது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று பந்தல்கால் நட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-

மருத்துவர் ராமதாஸ் வழிகாட்டுதலில் சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற உள்ளது. வன்னியர் சங்கம் நடத்தும் இந்த மாநாட்டில் தமிழ்நாடு மட்டுமில்லாமல் ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பின் தங்கிய மக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். இந்த மாநாட்டின் மூலம் சமூக நீதியை வென்றெடுக்க லட்சக்கணக்கான மக்கள் கூட உள்ளனர். தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும். மேலும் வன்னியர்கள் உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள பிற பின் தங்கிய சமுதாயங்கள் அனைவருக்கும் அவரவர்களுடைய மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும். இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியின் அடிப்படையில் இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்த திட்டமிட்டுள்ளோம். தமிழ்நாட்டை விட்டு மது மற்றும் போதை பொருட்களை ஒழிக்க வேண்டும் பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களுக்காகவும் வலியுறுத்த உள்ளோம்.

கடந்த 70 ஆண்டு காலமாக வடதமிழ்நாடு கல்வியிலும், சுகாதாரத்திலும், தனிநபர் வருமானத்திலும், மனித வளர்ச்சி குறியீட்டிலும் மிக மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ளது. அதே நேரத்தில் டாஸ்மாக் விற்பனையில் வட மாவட்டங்கள் தான் முன்னிலையில் உள்ளது. வட மாவட்டங்களில் தொழிற்சாலைகள் அதிகம் இல்லை.. வேலைவாய்ப்பு கிடையாது.. இந்த பகுதிகளுக்கு சிறப்பு திட்டங்களை வழங்கி தமிழ்நாட்டை வளர்ச்சி அடைய தமிழக அரசை வலியுறுத்துகின்ற மாநாடாகவும் இது அமையும்.

தெலுங்கானா, பிகார், கர்நாடகா, ஒரிசா, ஆந்திரா, ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதற்கு ஏற்ப இட ஒதுக்கீடுகளை உயர்த்தி கொடுக்கிறார்கள் இதுதான் உண்மையான சமூக நீதி.. அமைதியான முறையில் இந்த மாநாடு நடைபெற தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பட்டியல் இன சகோதரர்கள் உட்பட அனைத்து சமுதாய மக்களும் இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார். இந்த மாநாடு யாருக்கும் எதிரானது கிடையாது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கானது. தமிழ்நாட்டில் யார் யார் மிகவும் பின்தங்கி இருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் முன்னேறினால் தான் தமிழ்நாடு முன்னேறும் அதற்காகத்தான் இந்த மாநாடு. இவ்வாறு அவர் கூறினார்.