நில அபகரிப்பு வழக்கில் மா.சுப்பிரமணியன் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

கிண்டியில் வேறு ஒருவருக்கு ஒதுக்கப்பட்ட சிட்கோ நிலத்தை போலியான ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக பதியப்பட்ட வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவுக்காக அமைச்சர் மா.சுப்பிரமணியன் வரும் மே 6-ம் தேதி நேரில் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சிட்கோ நிலத்தை தமிழக அமைச்சராக பதவி வகிக்கும் மா.சுப்ரமணியன், சென்னை மாநகர மேயராக இருந்த போது, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி அந்த நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக தனது மனைவி காஞ்சனா பெயருக்கு மாற்றியுள்ளதாக பார்த்திபன் என்பவர் போலீஸில் புகார் அளித்தார்.

அதன்பேரில் பல்வேறு பிரிவுகளின் கீழ் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா ஆகியோர் மீதும் சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த 2019-ம் ஆண்டு காவல்துறை தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தற்போது சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி-எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜி. ஜெயவேல் முன்பாக நடந்து வருகிறது.

தன்மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்திருந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து. இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று (ஏப்.17) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம்சாட்டப்பட்ட மா.சுப்பிரமணியன், அவரது மனைவி காஞ்சனா இருவரும் நேரில் ஆஜராகவில்லை. மா.சுப்பிரமணியன் தரப்பில் அமைச்சரவைக் கூட்டம் நடப்பதால் விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதையேற்ற நீதிபதி ஜெயவேல், இந்த வழக்கின் குற்றச்சாட்டுப்பதிவுக்காக அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா ஆகிய இருவரும் வரும் மே 6-ம் தேதியன்று நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.