‘அமைச்சர் பொன்முடி பேசிய வெறுப்புப் பேச்சுக்கு வீடியோ ஆதாரம் உள்ளது. எனவே, புகார் இல்லாமலேயே போலீஸார் வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும். நான்கைந்து வழக்குப் பதிவு செய்து நீர்த்துப் போகச் செய்யாமல், ஒரு புகாரின் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்’ என்று காவல் துறைக்கு உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.
‘அமைச்சர் பொன்முடியின் வெறுப்புப் பேச்சு தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதா?’ என கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இது தொடர்பாக வியாழக்கிழமை மாலை 4.45 மணிக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி, மாலை இந்த விவகாரம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி, “அமைச்சர் பொன்முடிக்கு எதிராக 5 புகார்கள் பெறப்பட்டுள்ளன. அவை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கும் நடைமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “நான்கைந்து வழக்குகள் பதிவு செய்து விசாரணையை நீர்த்துப் போக செய்யாமல் ஒரு புகாரின் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும். அமைச்சர் பொன்முடி வெறுப்புப் பேச்சுக்கு வீடியோ ஆதாரம் உள்ளது. எனவே, புகார் இல்லாமலே வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும். வெறுப்பு பேச்சுக்கள் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதை அமல்படுத்தவில்லை எனில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்தார்.
பின்னர் இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் 23-ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அன்றைய தினம் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (ஏப்.17) விசாரணைக்கு வந்தது. அப்போது, பொன்முடியின் பேச்சை நீதிமன்றத்தில் திரையிடச் செய்த நீதிபதி, “இந்தப் பேச்சு முழுக்க முழுக்க துரதிஷ்டவசமானது. அமைச்சர் பொறுப்பை வகிப்பவர் பொறுப்புடன் பேச வேண்டாமா?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், “அவரது பேச்சு பெண்களை, சைவ – வைணவ மதங்களை இழிவுபடுத்தும் வகையில் இருக்கிறது. வெறுப்புப் பேச்சு தொடர்பாக புகார் அளித்தாலும் இல்லாவிட்டாலும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.
நடவடிக்கை எடுக்காவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது என்பதை நீதிபதி சுட்டிக்காட்டினார். உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவின் அடிப்படையில் அமைச்சர் பொன்முடியின் பேச்சு தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர், “வில்லை விட்டு புறப்பட்ட அம்பு போல அவருடைய பேச்சு பெருவாரியாக சென்றடைந்து விட்டது. அவர் மன்னிப்பு கேட்பதால் எந்தப் பயனும் இல்லை. இந்த விவகாரம் தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்பது வேதனை அளிக்கிறது. நன்றாக தெரிந்தே அமைச்சர் பொன்முடி இவ்வாறு பேசியிருக்கிறார். அமைச்சர் பொன்முடியின் பேச்சு வீடியோ இன்னும் சமூக வலைதளங்களில் காணப்படுகின்றன
இதே பேச்சை வேறு யாராவது ஒருவர் பேசி இருந்தால் இந்நேரம் 50 வழக்குகளாவது பதிவு செய்யப்பட்டிருக்கும். யாரும் சட்டத்துக்கு மேலானவர்கள் அல்ல என்று நீதிபதி தெரிவித்தார். ஊழலை எப்படி சகித்துக் கொள்ள முடியாதோ அதேபோல வெறுப்பு பேச்சையும் சகித்துக் கொள்ள முடியாது. ஏற்கெனவே நடிகை கஸ்தூரி, ஹெச்.ராஜா, அண்ணாமலை ஆகியோருக்கு எதிராக நீதிமன்றம் நடவடிக்கை எடுத்ததை நீதிபதி சுட்டிக்காட்டினார்.
ஏற்கெனவே ஒரு வழக்கில் தண்டிக்கப்பட்ட அமைச்சர் பொன்முடியின் தண்டனையும் தீர்ப்பும் உச்ச நீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அதனை தவறாக பயன்படுத்தும் வகையில் அவர் செயல்படுவதாக நீதிபதி சுட்டிக்காட்டினார். இந்த விவகாரத்துக்காக அவருக்கு வழங்கப்பட்ட சலுகை ரத்து செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தை நாடலாம் என்றும் குறிப்பிட்டார்.
எனவே, இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறதா, இல்லையா? வழக்குப் பதிவு செய்யவில்லை என்றால், ஏன் என்பது குறித்து டிஜிபி காணொலி மூலமாகவோ அல்லது அரசு தலைமை வழக்கறிஞர் மூலமாகவோ விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.