யார் எவ்வளவு உயர்ந்தவர்களாக இருந்தாலும் சட்டத்திற்கு அப்பாற்பட்டு இருக்க முடியாது என்றும் ஜனநாயகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் அரசாங்கங்கள் நடத்தப்பட வேண்டும். சம்பிரதாயத்திற்காக நியமிக்கப்படுபவர்களால் அரசு நடத்தப்படக்கூடாது என்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்த குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கரின் கருத்து குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
அரசியலமைப்புச் சட்டத்தை நாம் ஏற்றுக்கொண்டு 75 ஆண்டுகள் கடந்துவிட்டன. எதிர்க்கட்சி ஆளும் மாநில அரசுகளைச் சிதைத்து, பொது விவாதத்தில் வலதுசாரி கருத்துகளைத் திணிக்க முற்படும் தற்போதைய தீங்கானது, கவர்னர்கள், துணை ஜனாதிபதி, அவ்வளவு ஏன் மாண்புமிகு ஜனாதிபதி உட்பட அரசியலமைப்புப் பதவிகளை அரசியல் நோக்கங்களுக்குப் பயன்படுத்துவதில் இருந்து முளைத்த ஒன்றாகும்.
யாரும் எவ்வளவு உயர்ந்தவர்களாக இருந்தாலும் சட்டத்திற்கு அப்பாற்பட்டு இருக்க முடியாது. ஜனநாயகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் அரசாங்கங்கள் நடத்தப்பட வேண்டும். சம்பிரதாயத்திற்காக நியமிக்கப்படுபவர்களால் அரசு நடத்தப்படக்கூடாது. இதையே நமது சுப்ரீம்கோர்ட்டும் சுட்டிக்காட்டி உள்ளது,
வரலாற்றுச் சிறப்புமிக்க அத்தீர்ப்பு தவறான வழிமுறையைச் சரிசெய்யும் நகர்வாகும். ஆகவே, இந்த வரவேற்கத்தகுந்த சீர்திருத்த நடவடிக்கை பல ஜனநாயக விரோத சக்திகளை உலுக்கி உள்ளதை புரிந்துகொள்ள முடிகிறது. தற்போதைய தேவை என்பது, இந்த சீர்திருத்தம் முழுமையாக நடைமுறைத்தப்படுவதை உறுதிசெய்வதே! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.