கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த நாகை மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி பொருட்களை பறித்துச் சென்றனர். காயமடைந்த 4 மீனவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் வெளிமாவட்ட மீனவர்கள் தங்கி, மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த புதுப்பேட்டை மீனவர் காலனியைச் சேர்ந்த செந்தில்(46), ஜெகன்(36), திருவெண்காடு சாவடிகுப்பம் ராமகிருஷ்ணன்(67), சென்னை சாமுவேல்(35) ஆகியோர் நேற்று முன்தினம் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
அன்று இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ஒரு படகில் வந்த 3 பேர் நாகை மீனவர்கள் இருந்த படகில் ஏறி, கட்டை மற்றும் கம்பியால் மீனவர்களைத் தாக்கி, அரிவாளால் வெட்டினர். பின்னர், ஜிபிஎஸ் கருவி, 2 செல்போன்கள், 10 தூண்டில்கள், கடிகாரம், 50 கிலோ மீன்கள், வாக்கி- டாக்கி, சார்ஜர் லைட் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர். காயமடைந்த மீனவர்கள் 4 பேரும் நேற்று காலை கோடியக்கரை படகு துறையை வந்தடைந்தனர். அவர்களை சக மீனவர்கள் மீட்டு, வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து வேதாரண்யம் கடலோர காவல் நிலைய போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இதேபோல, வேளாங்கண்ணியை அடுத்த செருதூர் மீனவக் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு சொந்தமான படகில் மீனவர்கள் கோவிந்தசாமி, ரமேஷ், வெற்றி, ரவி ஆகியோர் கடந்த 15-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் கோடியக்கரைக்கு வடக்கே நேற்று அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் நாகை மீனவர்களை மீரட்டி, 2 செல்போன்கள், பேட்டரி, ஜிபிஎஸ் கருவி உட்பட ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர். இலங்கை கடல் கொள்ளையர்களால் தமிழக மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனற். இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.