தமிழகத்தில் தி.மு.க. அமைச்சர் காந்திராஜன் இருக்கும்போதுதான் நீட் கொண்டு வரப்பட்டது என்று எஸ்.பி.வேலுமணி கூறினார்.
முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் ஏராளமான கழக மாணவரணியினர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்துயதுடன் தி.மு.க. அரசிற்கு எதிராக உயிரிழந்த மாணவர்களுக்கு நியாயம் கேட்டு கோஷங்களை எழுப்பினர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது எஸ்.பி.வேலுமணி கூறியதாவது:-
நீட் தேர்வின் பெயரால் தி.மு.க. அரசு மக்களை ஏமாற்றியதால் 22 மாணவ – மாணவிகள் உயிரிழந்தார்கள். இருந்தாலும், தி.மு.க. நீட் தேர்வின் பெயரால் மக்களை ஏமாற்ற அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துகிறார்கள்.
உண்மை என்னவென்றால் காங்கிரஸ் ஆட்சியில் தி.மு.க. கூட்டணியில் இருக்கும்போது தி.மு.க. காந்திராஜன் கல்வி மந்திரியாக இருக்கும்போது நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. அப்போது நீட்டிற்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா. ஆனால் நீட் தேர்விற்காக நீதிமன்றத்தில் வழக்காடியது தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம்தான். ஆனால் அதை எல்லாம் மறைத்து, மக்களை ஏமாற்றி பொய் வாக்குறுதிகளை கொடுத்து 22 மாணவ – மாணவிகள் உயரிழந்தார்கள். ஆனால் மக்கள் இன்று தெளிவாக இருக்கின்றார்கள். தொடர்ந்து மக்களை ஏமாற்ற முடியாது.
அதுபோல் தி.மு.க. மந்திரி பொன்முடி பெண்களை மிகவும் இழிவாக பேசியதால் பொதுச்செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். மேலும் தமிழகத்தில் பல இடங்களிலும் வழக்குகள் பதியப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார். மேலும் நீட் தேர்வை காண்பித்து மத்திய அரசு மீது பழியைபோட்டு சட்டமன்ற தேர்தலை சந்திக்க திட்டமிடப்பட்டு உள்ளது தி.மு.க. ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் 7.5% சதவிகிதம் மருத்துவ இடஒதுக்கீடு கொண்டு வந்ததால் இன்று ஏராளமான அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பு படித்து வருகிறார்கள்.
அ.தி.மு.க.வை பொறுத்தவரை கூட்டணி வேறு, கொள்கை வேறு. இப்போது இருப்பது தேர்தலுக்காண கூட்டணி, வக்பு சட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் வாக்களித்து உள்ளோம். சட்டமன்றத்தில் கொண்டு வந்த வக்புக்கு எதிரான தீர்மானத்திற்க்கு ஆதரவு தெரிவித்து உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைப்போம் என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் தி.மு.க. நீட் ரகசியம் இருப்பதாகவும், ஆட்சிக்கு வந்தவுடன் நீட் ரத்து செய்யப்படும் என்றும் பொய் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றியதால் 22 மாணவ கண்மணிகளை நாம் இழந்து உள்ளோம், தற்பொழுது நீட் விலக்கிற்கு அனைத்து கட்சி கூட்டம் நடத்துவதாக தி.மு.க மீண்டும் நாடகத்தை நடத்தி வருகிறது.
அதனால் அந்த நாடகத்தை எடப்பாடி பழனிசாமி புறக்கணித்து உள்ளார். மேலும் நீட் தேர்வை கொண்டு வந்ததே காங்கிரஸ் ஆட்சியில் குலாம் நபி ஆசாத்தும், தமிழகத்தில் தி.மு.க. அமைச்சர் காந்திராஜன் இருக்கும்போதுதான் நீட் கொண்டு வரப்பட்டது. இது தற்பொழுது மக்கள் அனைவரும் உணர துவங்கி விட்டார்கள். எனவே வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி அமையும். இவ்வாறு அவர் கூறினார்.