டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில், டெல்லி முன்னாள் முதல்வர் கேஜ்ரிவால் நிலை தமிழக முதல்வருக்கும் ஏற்படலாம் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறினார்.
திண்டுக்கல் மாவட்டம் பழநியில் செய்தியாளர்களிடம் எச்.ராஜா நேற்று கூறியதாவது:-
நீட் தேர்வைக் கொண்டுவந்தது திமுக. 2010-ல் நீட் மசோதாவை மக்களவையில் முன்மொழிந்தது திமுகவைச் சேர்ந்த காந்திச்செல்வன். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்தான் நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டது. தொகுதி மறுவரையறையால் தமிழகம் பாதிக்கப்படாது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறிவிட்டார். டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில், கேஜ்ரிவால் நிலைமை தமிழக முதல்வருக்கும் ஏற்படலாம்.
தமிழகத்தில் நிலவும் மோசமான ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர பாஜக தலைவர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக-பாஜக கூட்டணி வெல்லும் என்ற தகவலால் முதல்வர் அச்சத்தில் உள்ளார். அமைச்சர் பொன்முடியை இதுவரை ஏன் கைது செய்யவில்லை? திமுகவை விரட்டியடிக்க மக்கள் தயாராகிவிட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.