ஜம்மு – காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: சுற்றுலா பயணிகள் 25 பேர் பலி!

தெற்கு காஷ்மீரில் உள்ள பகல்காமில் இன்று செவ்வாய்க்கிழமை அன்று தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுமார் 25 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர்.

சுற்றுலா தலமாக விளங்கும் பகல்காமில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. “உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. அது குறித்து அரசு தரப்பில் உறுதி செய்யப்படும். அண்மைய ஆண்டுகளில் பொது மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இது மிகப் பெரியது” என ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

அனந்த்நாக் காவல் துறை சார்பில் சுற்றுலாப் பயணிகளின் உதவிக்காக அவசர கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை தொடர்பு கொள்ள 9596777669, 01932225870 மற்றும் வாட்ஸ்அப் எண் 9419051940 அணுகலாம். தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இருந்துள்ளனர். அந்த வகையில் கர்நாடகா மற்றும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தகவல். சம்பந்தப்பட்ட மாநில அரசு தரப்பில் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

‘அப்பாவி பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தியது மிகவும் கொடூரமானது மற்றும் மன்னிக்க முடியாதது’ என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கூறியுள்ளார்.

“சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட இந்த கொடூர தீவிரவாத தாக்குதல் குறித்து அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இந்த கொடுஞ்செயலை செய்தவர்கள் கடுமையான விளைவுகளைச் சந்திப்பார்கள்” என்று மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கெஜேந்திர சிங் ஷெகாவத் கூறியுள்ளார்.

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, ஜம்மு காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹா, காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கே ஆகியோர் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் கூறியுள்ளனர்.

பகல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் இன்று (ஏப்.22) பிற்பகல் இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது. காடுகள், தெளிவான நீர் நிறைந்த ஏரிகள், பரந்த புல்வெளிகளுக்கு பெயர்பெற்ற இந்த பகுதிக்கு கால்நடையாகவோ அல்லது குதிரை மூலமாகவோ மட்டுமே செல்ல முடியும் என கூறப்படுகிறது. இங்கு சென்ற சுற்றுலாப் பயணிகளை பயங்கரவாதிகள் நெருக்கமாக இருந்து துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட இந்த கொடிய தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றுள்ளது. பிரபலமான ரிசார்ட் பகுதிக்கு அருகே பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து பாதுகாப்புப் படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர். இருப்பினும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. காயமடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இந்த தருணத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது ஒரு திட்டமிட்ட தாக்குதலாகக் கருதப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு முதல்வர் உமர் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நம்பமுடியாத அளவுக்கு அதிர்ச்சியடைந்தேன். இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் விலங்குகள், மனிதாபிமானமற்றவர்கள் மற்றும் அவமதிப்புக்கு தகுதியானவர்கள். கண்டன வார்த்தைகள் போதாது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சமீபத்திய ஆண்டுகளில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட மிகப் பெரிய தாக்குதல் இது” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இந்த தருணத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது ஒரு திட்டமிட்ட தாக்குதலாகக் கருதப்படுகிறது. இந்த தாக்குதலை அடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உயர்மட்ட பாதுகாப்பு மறுஆய்வுக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை மேற்கொண்டார். ஜம்மு பிரிவில் சிறப்பு கவனம் செலுத்தி பயங்கரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்க உத்தரவிட்டார். ஊடுருவலுக்கு பூஜ்ஜிய சகிப்புத்தன்மையை உறுதி செய்வதற்கான வழிமுறைகளையும் அவர் வழங்கினார்.

மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவர் மெஹபூபா முப்தி இந்த தாக்குதலை கண்டித்துள்ளார். “இதுபோன்ற வன்முறை ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் கண்டிக்கப்பட வேண்டியது. வரலாற்று ரீதியாக, காஷ்மீர் சுற்றுலாப் பயணிகளை அன்புடன் வரவேற்றுள்ளது. இந்த அரிய சம்பவம் மிகவும் கவலையளிக்கிறது. குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவும், சாத்தியமான பாதுகாப்பு குறைபாடுகளை ஆராயவும் முழுமையான விசாரணை தேவை. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது மிக முக்கியமானது, மேலும் எதிர்கால தாக்குதல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.