“பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு ஏப். 29 முதல் மே 5ம் தேதி வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும்” என்று சட்டப்பேரவையில், விதி 110-ன்கீழ் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:-
பல்வேறு சிறப்பிற்குரிய தமிழ்த்தாயின் தவப்புதல்வர்களில் ஒருவரான பாவேந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் ஏப்ரல் 29 முதல் மே 5 வரை ஒரு வார காலத்திற்கு தமிழ் வார விழா கொண்டாடப்படும். இந்த ஒரு வார காலத்தில் தமிழ்நாடு முழுவதும் தமிழ்மொழியையும், பாவேந்தர் பாரதிதாசனின் பங்களிப்பையும் கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
* கவியரங்கங்கள் மற்றும் இலக்கிய கருத்தரங்குகள்: “எல்லார்க்கும் எல்லாம் என்று இருப்பதான இடம் நோக்கி நடக்கின்றது இந்த வையம்” என்ற பாவேந்தரின் கவிதை வரிகளை மையப்படுத்தி அனைத்து மாவட்டங்களிலும் கவியரங்கங்கள் மற்றும் கருத்தரங்கங்கள் நடைபெறும். சிறந்த தமிழறிஞர்கள் மற்றும் இளங்கவிஞர்கள் இதில் பங்கேற்பார்கள்.
* பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது: தமிழ் மொழியில் சிறந்து விளங்கும் இளம் எழுத்தாளர், கவிஞர் ஒருவருக்கு பாரதிதாசன் இளம் படைப்பாளர் என்ற விருது வழங்கப்படும்.
* தமிழ் இலக்கியம் போற்றுவோம்: புகழ் பெற்ற தமிழிலக்கிய படைப்பாளிகளின் படைப்புகளை அடிப்படையாகக் கொண்டு ஆய்வரங்கங்கள் நடத்தப்படும்.
* பள்ளிகளில் தமிழ் நிகழ்ச்சிகள்: மாணவர்களிடையே தமிழ்மொழியின் பெருமையை எடுத்துரைக்க பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.
* தமிழ் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள்: தமிழ் இசை, நடனம், மற்றும் மரபுக்கலைகளை மையப்படுத்திய கலை நிகழ்ச்சிகள் மாநிலம் முழுவதும் நடைபெறும். இது போன்ற தமிழ் நிகழ்ச்சிகள் மூலமாக பாவேந்தர் பிறந்த நாள் தமிழ் மணக்கும் வாரமாகக் கொண்டாடப்படும்.
தமிழ் வார விழா நமது மொழியின் பெருமையை உலகிற்கு எடுத்துரைப்பதற்கு ஒரு நல்வாய்ப்பாகும். தமிழ்மொழியை அடுத்த தலைமுறைகளுக்கும் எடுத்துச் செல்வோம். “வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும்” என்றார் பாவேந்தர். அத்தகைய எழுச்சியை இந்த விழாக்கள் மூலம் உருவாக்க வேண்டும். செந்தமிழைப் பரப்ப இந்த விழாக்கள் பயன்படும். தமிழர் தம் அறிவுச் செல்வத்தைக் காட்ட இந்த விழாக்கள் பயன்படும். தமிழ் உணர்ச்சியை மங்காமல், குன்றாமல் இந்த அரசு காத்திடும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டு பேசினார்.