கோவை மாநகராட்சி கழிவறைக்கு ஐயா கக்கன் மற்றும் ஐயா அண்ணாதுரை ஆகியோரின் பெயரைச் சூட்ட அனுமதித்தது வெட்கக்கேடானது என்று சீமான் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளதாவது:-
கோவை மாநகராட்சி கழிவறைக்கு தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் தூய அரசியலின் நேர் வடிவம் ஐயா கக்கன் மற்றும் முன்னாள் முதல்வர் ஐயா அண்ணாதுரை ஆகியோரின் பெயரைச் சூட்டியுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் கடந்த 4 ஆண்டுகளாகப் புதிதாகத் திறக்கும் நூலகம், கலையரங்கம், பேருந்து நிலையம் என அனைத்து முதன்மை அரசு கட்டிடங்களுக்கும் முன்னாள் முதல்வர் ஐயா கருணாநிதி அவர்களின் பெயரைச் சூட்டுவதையே வாடிக்கையாக வைத்துள்ளது. அதைத்தவிர, தமிழ்ப்பெரும் தலைவர்களுக்கு தமிழ்நாட்டிலுள்ள ஒரு சில அடையாளங்களையும் அழித்தொழிக்கும் வகையில், பராமரிப்பு என்ற பெயரில் கட்டிடங்களில் ஏற்கனவே இருக்கும் தலைவர்களின் பெயரையும் மாற்றி வருகிறது.
இவையெல்லாம் போதாதென்று கோவை மாநகராட்சியில் கழிவறைக்கு ஐயா கக்கன் மற்றும் ஐயா அண்ணாதுரை அவர்களின் பெயரைச் சூட்டி இழிவுபடுத்தியுள்ளது, பெருந்தலைவர்களை அவமதித்து, அவர்களின் பெரும்புகழை சிறுமைப்படுத்தும் கொடுஞ்செயலாகும். இதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? கழிவறைக்கு ஐயா அண்ணாதுரை பெயரை வைத்த திமுக அரசு, புதிதாகத் திறக்கும் மதுக்கடைக்கு ஐயா கருணாநிதி பெயரைச் சூட்டுமா?
ஆகவே, கோவை மாநகராட்சி கழிவறைக்கு தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் தூய அரசியலின் நேர் வடிவம் ஐயா கக்கன் மற்றும் முன்னாள் முதல்வர் ஐயா அண்ணாதுரை ஆகியோரின் பெயரைச் சூட்டுவதைக் கைவிடுவதோடு, இதுபோன்ற இழிசெயல்கள் வேறெங்கும் நடைபெறாதவாறு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.