டெல்லியின் ஆதிக்க மனப்பான்மையும் மாறவில்லை; நம் போராட்ட குணமும் ஓயவில்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னையில் நடைபெற்ற விழாவில் ‘திராவிட அறநெறியாளர் தமிழ்வேள் பி.டி.ராஜன் வாழ்வே வரலாறு’ என்ற நூலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். அதனை முன்னாள் நீதியரசர் சி.டி.செல்வம் பெற்றுக்கொண்டார். அதன்பின்னர் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
திராவிட இயக்கத்தின் வேராக விளங்கும் நீதிக்கட்சியின் முன்னோடிகளில் ஒருவரான திராவிட அறநெறியாளர் தமிழ்வேள் பி.டி.ராஜன் குறித்த “வாழ்வே வரலாறு” என்ற நூலை நீதிக்கட்சியின் வழித்தடத்தில் உருவான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இருந்து நான் வெளியிடுவதில் என்னுடைய வாழ்நாளில் கிடைத்திருக்கக்கூடிய பெருமையாக நான் கருதுகிறேன். பி.டி.ராஜனின் வாழ்க்கை வரலாற்று நூலை, தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் என்ற தகுதியோடு, அந்த பெருமையோடு நான் வெளியிடுகிறேன்!
1937 தேர்தலில் நீதிக்கட்சி தோற்கடிக்கப்பட்டபோது, “என்றாவது ஒரு நாள் இதற்கு பழிக்கு பழி வாங்குவோம்” என்று பி.டி.ராஜன் சொன்னார். 30 ஆண்டுகள் கழித்து, திமுக வரலாற்று வெற்றியை பெற்றபோது, ‘பழிக்கு பழி வாங்கப்பட்டது’ என்று சொன்னார். திமுகவின் எழுச்சியை – வெற்றியை நீதிக்கட்சியின் வெற்றியாக எண்ணி, ‘நீதிக்கட்சி மறுபடியும் வென்றது’ என்று அவர் சொல்லி மகிழ்ந்தார். அந்த மகிழ்ச்சியும், திமுகவின் சாதனைகளும், செயல்பாடுகளும்தான், 1971 தேர்தலில், திமுகவுக்குத் தான் மக்கள் வாக்களிக்க வேண்டும்; பெரும்பான்மை பலத்தோடு திமுக ஆட்சிதான் அமையவேண்டும்” என்று அறிக்கை வெளியிடுவதற்கு காரணமாக இருந்தது.
அந்தளவுக்கு, அழுத்தமான திராவிட இயக்கத் தலைவராக இருந்தவர் தான் பி.டி.ராஜன். எந்தளவுக்கு பேரறிஞர் அண்ணா அவர்களும், தலைவர் கலைஞர் அவர்களும், பி.டி.ராஜன் அவர்களைப் போற்றினார்கள் என்றால், 1967-ல் திமுக ஆட்சி அமைந்தபோது, அமைச்சர்களுக்கு எல்லாம் நீதிக்கட்சியின் சார்பில் பி.டி.ராஜன் அவர்கள் ஒரு விருந்து வைத்தார். அப்போது உரையாற்றிய பேரறிஞர் அண்ணா சொன்னார், “தந்தை பெரியாரின் சமூக சீர்திருத்தக் கருத்துகளை நிறைவேற்றுவேன்” என்று குறிப்பிட்டுவிட்டு, ”தமிழவேள் பி.டி.ராஜன் போன்ற பெருந்தலைவர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில், எனது ஆட்சி நடைபெறும்’ என்று உறுதியளித்தார்.
“பி.டி.ராஜன் அரிய ஆலோசனைகளை நிறைவேற்றி வைக்கும் செயல் வடிவமாகத்தான் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி திகழ்கிறது” என்று தலைவர் கலைஞர் சொன்னார். அந்த வழித்தடத்தில்தான் நாமும் இன்றைக்கு பயணித்துக் கொண்டு இருக்கிறோம். 1973-ம் ஆண்டு மதுரையில் நடந்த பி.டி.ராஜன் அவர்களுடைய 82-வது பிறந்தநாள் விழாவில், அன்றைக்கு முதல்-அமைச்சராக இருந்த தலைவர் கலைஞர், அமைச்சர் பெருமக்களாக இருந்த நாவலர், பேராசிரியர் என்.வி.நடராசன் என்று பலரும் கலந்துகொண்டார்கள். அந்த உணர்வு சிறிதும் குறையாமல், இன்றைக்கு 133-வது ஆண்டு விழாவில், நம்முடைய திராவிட மாடல் அமைச்சரவை கலந்து கொண்டு இருக்கிறது.
இந்த மகிழ்ச்சியான தருணத்தில், விழா ஏற்பாட்டாளர்களுக்கு ஒன்றை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.. விழாவின் அழைப்பிதழில், “நீதிக்கட்சியின் இறுதித் தலைவராகவும் இருந்த” என்று போட்டிருக்கிறீர்கள்.. நன்றாக ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.. “நீதிக்கட்சிக்கு இறுதி என்பதே கிடையாது!” இன்னும் சொல்கிறேன்.. “நீதிக்கட்சியின் நீட்சிதான் இந்த ஆட்சி” என்று தமிழ்நாடு சட்டமன்றத்திலேயே நான் சொல்லியிருக்கிறேன். ஏனென்றால், 1967-ல் நாம் ஆட்சிக்கு வந்தபோது, ‘திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முதலாக ஆட்சிக்கு வந்தது’ என்று சில ஊடகங்களில் எழுதினார்கள். அப்போது பேரறிஞர் அண்ணாதான் சொன்னார்.. “அரசியல் தேர்ச்சியுடன் நாடாண்ட நீதிக்கட்சியின் பாரம்பரியத்தில் வளர்ந்த கட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகம்” என்று சொன்னார். நீதிக்கட்சியின் செயலாளர்களில் ஒருவராக இருந்த முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் என்ன சொன்னார் என்றால், ”நீதிக்கட்சி, இன்றைய திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு, பாட்டன் முறை. பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கம், தந்தை முறையாகும்” என்று குறிப்பிட்டார்.
இதையெல்லாம் கடந்து, 1966-ம் ஆண்டு நீதிக்கட்சியின் பவளவிழா பொதுக்கூட்டத்தில், ”இன்றைய தி.மு.க.வினர் நம்முடைய வாரிசுகள்தான்’ என்று பி.டி.ராஜன் அவர்களே குறிப்பிட்டார். எனவே, நான் அழுத்தந்திருத்தமாக சொல்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி என்பது நீதிக்கட்சியின் தொடர்ச்சியான ஆட்சிதான். பி.டி.ராஜன் அவர்களுக்கு நம்முடைய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மட்டும் வாரிசு அல்ல, நானும் வாரிசுதான்; திராவிட வாரிசுகள். இங்கே இருப்பவர்கள் எல்லோரும் திராவிட வாரிசுகள். வாரிசு என்ற சொல்லைக் கேட்டாலே சிலருக்கு எரிகிறது. பற்றிக்கொண்டு எரிகிறது. அப்படி எரியட்டும் என்று தான் நாம் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
இன்றைக்கு எப்படி திராவிடத்தை ஒழிப்போம் என்று சில கைக்கூலிகள் பேசிக்கொண்டு இருக்கிறார்களோ, அதே மாதிரி, பி.டி.ராஜன் அவர்கள் காலத்திலும், “நீதிக்கட்சியை குழி தோண்டி பாதாளத்தில் புதைத்துவிடுவேன்” என்று ஒரு தலைவர் சொன்னார். ஆனால், பி.டி.ராஜனோடு தொடர்ச்சியாக, பண்பாளர் பழனிவேல் ராஜன் வந்தார்; இப்போது, பழனிவேல் தியாகராஜனும் நம்முடன் இருக்கிறார்.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை பொறுத்தவரைக்கும், அறிவார்ந்த – வலிமையான வாதங்களை வைக்க கூடியவர். நான் அவருக்கு கூற விரும்புவது, இந்தச் சொல்லாற்றல் அவருக்குப் பலமாகதான் இருக்கவேண்டுமே தவிர, அவரின் பலவீனமாக ஆகிவிடக்கூடாது. இதை ஏன் அதை சொல்கிறேன் என்றால், அது அவருக்கே தெரியும். நம்முடைய எதிரிகள், வெறும் வாயையே மெல்லக் கூடிய விநோத ஆற்றல் பெற்றவர்கள், அவர்களின் அவதூறுகளுக்கு உங்களின் சொல் அவலாக ஆகிவிடக் கூடாது என்பதை கழகத் தலைவராக மட்டுமல்ல, உங்கள் மீது இருக்கின்ற அக்கறை கொண்டவனாகவும், அறிவுரை வழங்க கடமைப்பட்டிருக்கிறேன். என் சொல்லை தட்டாத பி.டி.ஆர் என்னுடைய அறிவுரையின் அர்த்தத்தையும், ஆழத்தையும் நிச்சயம் புரிந்துகொள்வார் என நம்புகிறேன்.
நாம் இந்தியின் எதிர்ப்பாளர்கள் அல்ல. இந்தியை திணிப்பவர்களின் எதிர்ப்பாளர்கள் என்று அன்றே விளக்கமாக தெரிவித்தவர் பி.டி.ராஜன் அவர்கள். அந்த கொள்கையை நாம் இன்றும் தொடர்ந்து வருகிறோம். டெல்லியின் ஆதிக்க மனப்பான்மையும் மாறவில்லை. நம் போராட்ட குணமும் ஓயவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.