தமிழகத்தில் பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2-ல் திறப்பு!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் ஜூன் 2-ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 3 முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரை நடத்தப்பட்டது. அதேபோல், 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வுகள் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 1 முதல் 3-ம் வகுப்பு குழந்தைகளுக்கு ஏப்ரல் 11-ம் தேதியும், 4, 5-ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 17-ம் தேதியும் தேர்வுகள் முடிந்து மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுவிட்டது.

அதைத்தொடர்ந்து 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்று வந்த முழு ஆண்டுத் தேர்வுகள் நாளை (ஏப். 24) நிறைவுபெறுகின்றன. இறுதி நாளில் சமூக அறிவியல் பாடத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இவர்களுக்கான கோடை விடுமுறை ஏப். 25 முதல் தொடங்குகிறது. எனினும், ஆசிரியர்கள் பள்ளி இறுதி வேலைநாளான ஏப்ரல் 30-ம் தேதி வரை பணிக்கு வந்து விடைத்தாள் மதிப்பீடு மற்றும் மாணவர் சேர்க்கை போன்ற நிர்வாகப் பணிகளை கவனிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் ஜூன் 2-ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்ககல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் வெளியிட்ட அறிவிப்பில், “2025-26-ம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் விடுமுறை முடிந்து ஜூன் 2-ல் (திங்கள் கிழமை) திறக்கப்படும். எனவே, அன்றைய தினத்தில் பள்ளிகளை திறப்பதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.