பயங்கரவாதத்தை ஒடுக்க மத்திய அரசுக்கு துணை நிற்போம்: முதல்வர் ஸ்டாலின்!

ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை இன்று தமிழக சட்டப்பேரவையில் கண்டித்துள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின். “பயங்கரவாதத்தை ஒடுக்க மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு துணை நிற்கும்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பகல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 28 பேர் பலியாகி உள்ளனர். பகல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் நேற்று பிற்பகல் 3 மணியளவில் நடத்திய கொடூர துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உள்பட 28 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். பலர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் நாட்டையே அதிர வைத்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து காஷ்மீர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இவர்கள் எப்படி இந்த தாக்குதலை திட்டமிட்டார்கள் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தமிழக சட்டசபையில், ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:-

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பகல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்டுள்ள மனிதாபிமானமற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு, கடும் கண்டனத்தையும், அதில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

சுற்றுலா தலத்தில் நேற்று பயங்கரவாதிகள் மிக கொடூரமான தாக்குதல்களை நடத்தி இருக்கிறார்கள். சுற்றுலா பயணிகள் 28 பேர் கொல்லப்பட்ட தகவல், அதிர்ச்சியையும், துயரத்தையும் அளித்துள்ளது. காஷ்மீரில் மிக பிரபலமான சுற்றுலா தளமான பகல்காமிற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அப்பாவி மக்கள் மீது இது போன்று நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதல்கள் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

இந்த தாக்குதலுக்கு பயங்கரவாத அமைப்பு ஒன்று பொறுப்பேற்றுள்ளது. அங்கு மோசமான சூழல் நிலவுகிறது என்பதற்கு இது எடுத்துக்காட்டாக அமைந்து இருக்கிறது. பயங்கரவாத அமைப்புகள், பங்கரவாதிகள் எத்தைகைய எண்ணம் கொண்டவராக இருந்தாலும், அவற்றை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இந்த தாக்குதலில் இதுவரை 28 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த சிலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற தகவல் எனக்கு கிடைத்த உடன், டெல்லியில் உள்ள தமிழக இல்லத்தில் 24 மணி நேரமும் செயல்படும் சிறப்பு மையம் செயல்படுவதற்கு உத்தரவிட்டு இருக்கிறேன். அனைவருக்கும் தேவையான உதவிகளை செய்யவும், மருத்துவ வசதிகளை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பயங்கரவாத தாக்குதல் நடக்க இந்திய மண்ணில் இடமில்லை. இந்த தாக்குதல்களை தடுத்து ஆக வேண்டும். இதுபோன்ற சம்பவம் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திட மத்திய அரசு அனைத்து நடவடிக்கையும் எடுத்திட வேண்டும் என கேட்டு கொள்கிறேன். அத்தகைய நடவடிக்கையை எடுத்திட தமிழக அரசு, மத்திய அரசுக்கு துணை நிற்கும் என்ற உறுதியை அளிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.