தென் மாவட்ட ரெயில்வே திட்டங்களின் சேவை மற்றும் வளர்ச்சி குறித்த ஆலோசனை கூட்டம் மதுரை விரகனூரில் இன்று நடைபெற்றது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கூட்டம் நடைபெற்ற நிலையில், பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு இன்று நடந்தது. கூட்டத்திற்கு தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமை தாங்கினார். இதில் எம்.பி.க்கள் வைகோ, துரை. வைகோ (திருச்சி), சு.வெங்கடேசன் (மதுரை), தங்கதமிழ்செல்வன் (தேனி), மாணிக்கம் தாகூர் (விருதுநகர்), முகமது அப்துல்லா, ராணிஸ்ரீ குமார் (தென்காசி), ராபர்ட் புரூஸ், சச்சிதானந்தம் (திண்டுக்கல்), தர்மர் உள்ளிட்ட 11 பேர் கலந்துகொண்டு தங்கள் பகுதிக்கான ரெயில்வே திட்டங்கள் குறித்து கோரிக்கை மனுக்களை அளித்து பேசினர்.
கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அளித்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:-
விருதுநகர் மற்றும் செங்கோட்டை இடையே அகல ரெயில் பாதை மாற்றத்தின் போது கரிவலம்வந்தநல்லூர் மற்றும் சோழபுரம் ஆகிய 2 ரெயில் நிலையங்கள் முற்றிலுமாக மூடப்பட்டது. இந்த ரெயில் நிலையங்களை சுற்றி 60-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்த இரண்டு ரெயில் நிலையங்களையும் பயன்படுத்தி வந்தனர். மேலும் இந்த பகுதியைச் சேர்ந்த அதிகமானோர் ராணுவத்தில் பணிபுரிகின்றனர். கரிவலம்வந்தநல்லூர் மற்றும் சோழபுரம் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் இந்த சிரமத்தை தவிர்க்க கரிவலம் வந்தநல்லூர் நிலையத்தை உடனடியாக ஹால்ட் ஸ்டேஷனாக மீண்டும் திறந்து, பின்னர் பிளாக் ஸ்டேஷனாக மாற்றவேண்டும்.
மதுரை கோட்ட காலியிடங்களை மீண்டும் சென்னை கோட்ட ரெயில்வே வாரியத்தின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவேண்டும், திருநெல்வேலி-சென்னை எழும்பூர் இடையே இரட்டை ரெயில் பாதை பணிகள் தற்போது நிறைவடைந்து உள்ளது. கோவில்பட்டி-திண்டுக்கல் இடையே நான்கு ஜோடி மெமு ரெயில் சேவைகளை இயக்க வேண்டும். இது சாத்தூர், விருதுநகர், திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான் மற்றும் கொடைரோடு ஆகிய முக்கிய வர்த்தக நகரங்களை இணைக்கிறது. இதனால் பயணிக்கும் பொது மக்களும், வியாபாரிகளும் பயனடைவார்கள்.
சுதந்திரத்திற்கு பிறகு ரெயில்வேயால் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்ட முக்கிய திட்டங்களில் கொங்கன் ரெயில் பாதையும் ஒன்றாகும். கொங்கன் ரெயில்வே 25 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் இன்னும் தமிழக மக்கள் கொங்கன் ரெயில் வேயின் பயன்பாட்டை பெறவில்லை. தற்போது திருநெல்வேலி மற்றும் மும்பை இடையே ஒரு வாராந்திர எக்ஸ்பிரஸ் (வண்டி எண் : 22629/22630) அதிக ஆதரவுடன் கொங்கன் ரெயில்வே வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரெயில் திருநெல்வேலி மற்றும் மும்பை இடையே தினசரி எக்ஸ்பிரஸ் ரெயிலாக மாற்றப்பட வேண்டும்.
மதுரை-கோவை இடையே 5 ரெயில்கள் இயப்பட்டது. எனவே ராமேசுவரம் மற்றும் செங்கோட்டையில் இருந்து கோவைக்கு கூடுதல் ரெயில்களை அறிமுகப்படுத்த வேண்டும். செங்கோட்டையிலிருந்து பெங்களூருக்கு ஒரு புதிய தினசரி ரெயிலை அறிமுகப்படுத்த வேண்டும். மதுரை-கோவை (வண்டி எண்: 16721/16722) எக்ஸ்பிரஸ் ரெயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும். இந்த இரயில் மதுரையிலிருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.10 மணிக்கு கோவையை அடைகிறது. திரும்பும் திசையில் இந்த ரெயில் கோவையில் இருந்து மதியம் 2.30 மணிக்குப் புறப்பட்டு மாலை 7.35 மணிக்கு மதுரையை அடைகிறது. இந்த ரெயில் திருநெல்வேலி வரை நீட்டிக்கப்பட வேண்டும். இதனால் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பயனடைவார்கள்.
சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில் ஆகிய இடங்களுக்கு இணைப்பு வசதிகளை வழங்குவதற்காக மைசூர்-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் நேரத்தை மாற்ற வேண்டும், திருச்செந்தூர் மற்றும் சென்னை எழும்பூர் இடையே ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸை அறிமுகப்படுத்த வேண்டும், திருமங்கலம் ரெயில் நிலையத்தின் வடக்கு முனையில் நடை மேம்பாலம் அமைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளார்.