கும்பகோணத்தில் கலைஞர் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் தொடங்க பல்வேறு கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களும் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, இந்தியாவில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள்ளது என்றால் அது கலைஞர் போட்ட விதை, ஜனநாயகத் தலைவர் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் தொடங்க வேண்டும் என்று கூறினார்.
பாமக சட்டமன்றக் குழுத் தலைவர் ஜி.கே.மணி பேசுகையில், “எளிய மக்களின் துயர் துடைத்தவர் கலைஞர், பல்கலைக்கழகத்துக்கு அவரது பெயரை வைக்க வேண்டும். காமராசர், தந்தை பெரியார், எம்.ஜி.ஆர் ஜெயலலிதா என எல்லாத் தலைவர்கள் பெயரிலும் பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன.. ஏன் நமது முன்னாள் முதலமைச்சர் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கக் கூடாது? என்றார். பல்கலைக்கழகம் தொடங்க பல்வேறு கட்சி உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர். சிந்தனைச் செல்வன், வீ.பி. நாகைமாலி, இராமச்சந்திரன், டாக்டர் சதன் திருமலைக்குமார், முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, ரா.ஈஸ்வரன், தி.வேல்முருகன், அமைச்சர் துரைமுருகன், அதேபோல், சபாநாயகர் அப்பாவு ஆகியோர் 55-ஐப் பயன்படுத்தி கலைஞர் பெயரால் ஓர் பல்கலைக்கழகத்தை உருவாக்க வேண்டுமென்று பேசினர்.
இதைத்தொடர்ந்து பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், “கலைஞர் பிறந்த ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் விரைவில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்ற உறுதியான செய்தியை இங்கே அறிவிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:-
நம்முடைய உறுப்பினர்கள் கு.செல்வப்பெருந்தகை, ஜி.கே. மணி, சிந்தனைச் செல்வன், வீ.பி. நாகைமாலி, இராமச்சந்திரன், டாக்டர் சதன் திருமலைக்குமார், முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, ரா.ஈஸ்வரன், தி.வேல்முருகன், பின்னர் அவர்களைத் தொடர்ந்து நம்முடைய அவை முன்னவர் அவர்கள், அதேபோல், பேரவைத் தலைவர் ஆகியோர் விதி எண் 55-ஐப் பயன்படுத்தி நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களுடைய பெயரால் ஓர் பல்கலைக்கழகத்தை உருவாக்க வேண்டுமென்று தங்களுடைய கருத்துக்களை உணர்வுபூர்வமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பள்ளிகளாக இருந்தாலும், கல்லூரிகளாக இருந்தாலும், அவையெல்லாம் இன்றைக்கு வளர்ந்து, மேலோங்கி மற்ற மாநிலங்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக, ஏன், உலக அளவிலே இன்றைக்குப் பாராட்டப்படக் கூடிய அளவிற்கு வளர்ந்திருக்கின்றன. நாட்டிலேயே முதல் இடத்திற்கு வந்திருக்கக்கூடிய அந்தக் கல்வி நிலையங்கள் எல்லாம் உருவாவதற்குக் காரணமாகப் பல்வேறு தலைவர்கள் இருந்தாலும், அவர்களிலே முக்கியமான தலைவர்களில் ஒருவராக நம்முடைய தலைவர் கலைஞர் விளங்கிக் கொண்டிருக்கிறார்.
அப்படி கல்வியின் வளர்ச்சிக்குப் பாடுபட்டிருக்கக்கூடிய, பல்வேறு திட்டங்களை உருவாக்கித் தந்திருக்கக்கூடிய நம்முடைய தலைவர் கலைஞருக்கு – எல்லோரும் இங்கே குறிப்பிட்டிருப்பதைப்போல, பல்கலைக்கழகங்களுக்கெல்லாம் பல்கலைக்கழகமாக விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய நம்முடைய தலைவர் கலைஞருக்கு விரைவில் அவர் பிறந்த ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் இருக்கக்கூடிய கும்பகோணத்திலே, நம்முடைய உறுப்பினர் ஜி.கே. மணி குறிப்பிட்டதைப் போன்று, எந்தவிதத் தயக்கமுமின்றி நான் அறிவிக்கிறேன். தலைவர் கலைஞர் பெயரில் கும்பகோணத்தில் விரைவில் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும் என்ற உறுதியான செய்தியை மீண்டும் சொல்கிறேன்; எந்தவித தயக்கமுமின்றி இதைச் சொல்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.