டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, குரூப் 4 தேர்வில் 3,935 பணியிடங்கள் நிரப்பப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான 3935 காலிப்பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி IV பணிகளுக்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் 2025-ம் ஆண்டிற்கான ஆண்டுத்திட்டத்தில் குறிப்பிட்டுள்ளவாறு இன்று (25.04.2025) வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் 2504.2025 முதல் 24.05.2025 வரை தேர்வாணைய இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்வு 12.07.2025 அன்று நடைபெறும்.

2018 முதல் 2025 வரையுள்ள 8 ஆண்டுகளில், முதன்முறையாக தொடர்ச்சியாக அடுத்தடுத்த ஆண்டுகளில் (2024 மற்றும் 2025) ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி IV பணிகளுக்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – IV (தொகுதி IV பணிகள்) மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளில் (வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் பதவிகள் நீங்கலாக), 2022-ம் ஆண்டு அறிவிக்கையில் மூன்று நிதியாண்டுகளுக்கான காலிப்பணியிடங்களும், 2024ம் ஆண்டு அறிவிக்கையில், இரண்டு நிதியாண்டுகளுக்கான காலிப்பணியிடங்களும் ஆக மொத்தம் ஐந்து நிதியாண்டுகளுக்கு 17799 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. அதாவது, ஒரு நிதியாண்டிற்கு சராசரியாக 3560 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

2025-ம் ஆண்டு ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV(தொகுதி IV பணிகள் மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளில் (வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் பதவிகள் நீங்கலாக), ஒரு நிதியாண்டிற்கு (2025-26) 3678 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 2022 மற்றும் 2024 ஆண்டிற்கான அறிவிக்கைகளில் சராசரியாக ஒரு நிதியாண்டிற்கு நிரப்பப்பட்ட காலிப்பணியிடங்களுடன் (3560) ஒப்பிடும்போது, 2025-ம் ஆண்டில் கூடுதலாக காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. மேலும், 2025-ம் ஆண்டு அறிவிக்கையில் வெளியிடப்பட்ட காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை, அரசுத் துறை / நிறுவனங்களிடமிருந்து அதிகரித்து பெறப்படும் பட்சத்தில் கலந்தாய்விற்கு முன்பாக மேலும் அதிகரிக்கப்படும் எனத் தெரிவித்து கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.