நாட்டின் விடுதலைக்காக போராடியவர்களை இப்படியா பேசுவது? என சாவர்க்கர் அவதூறு வழக்கில், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியிருக்கிறது.
“சாவர்க்கர் ஆங்கிலேயர்களுக்கு அடிமையாக இருந்தார். அவரிடமிருந்து பென்ஷன் பெற்றார்” என்று ராகுல் காந்தி பேசியதாக புகார் எழுந்தது. இந்த புகாரை விசாரித்த லக்னோ நீதிமன்றம், ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பியிருந்தது. இதை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் மேல் முறையீடு செய்திருந்தார். ஆனால் நீதிமன்றம் வழக்கை எடுத்துக்கொள்ளவில்லை. எனவே, உச்சநீதிமன்றம் ராகுல் அணுகியிருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் டிபன்கர் தத்தா மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்தது.
விசாரணையில் ராகுல் காந்திக்கு நீதிபதிகள் கடுமையான கேள்விகளை எழுப்பினர். “மகாத்மா காந்தி அவரது கடிதங்களில் ‘உங்கள் பணிவான பணியாளர்’ (Your faithful servant) என்று எழுதியிருக்கிறார். அப்படியென்றால் அவரும் பிரிட்டிஷார்களின் வேலைக்காரரா? அப்படித்தான் பொருள்படுமா? சாவர்க்கருக்கு எதிராக ஏன் இப்படியான பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பேச்சை பேசுகிறீர்கள்? நீங்கள் அரசியல் தலைவர்தானே! பின்னர் ஏன் சமூகத்தில் சலசலப்பை உருவாக்கும் வகையில் பேசுகிறீர்கள்? உங்களது பாட்டி, இந்திரா காந்தி, பிரதமராக இருந்தபோது, சாவர்க்கரை பாராட்டி கடிதம் எழுதியிருக்கிறார். இதையெல்லாம் தெரிஞ்சு வச்சுக்கோங்க. சுதந்திர போராட்ட வீரர்களை இப்படி பேசக்கூடாது. இந்த முறை உங்களுக்கு இடைக்கால தடை கொடுக்கிறோம். ஆனால் அடுத்த முறையும் இப்படியான புகார்கள் எழுந்தால், நாங்களே நேரடியாக தலையீடு செய்து வழக்கை நடத்துவோம்” என்று எச்சரித்துள்ளனர்.
ராகுல் காந்தி சார்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.எம். சிங்க்வி ஆஜராகியிருந்தார். ராகுல் காந்தி இனிமேல் இப்படி பேசமாட்டார் என்று அவர் உறுதியளித்திருந்தார். தற்போது ராகுலுக்கு வழங்கப்பட்ட சம்மனுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருப்பதால் இந்த வழக்கில் ராகுலுக்கு ஓரளவுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது என்று சொல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.