ஆளுநருக்கு எதிரான வழக்கில் கிடைத்திருக்கும் தீர்ப்பு என்பது தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தால் மாநிலங்களுக்கு பெற்றுத்தந்திருக்க கூடிய மாபெரும் விடுதலை என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய 10 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருந்த நிலையில் அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹ்தகி, அபிஷேக் சிங்வி, ராகேஷ் திவேதி, பி.வில்சன் ஆகியோர் வழக்காடி வெற்றியை பெற்றுத் தந்தனர். இவர்களுக்கான பாராட்டு விழா சென்னை கிண்டியில் நேற்று நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்து, வழக்கறிஞர்களுக்கு பாராட்டு தெரிவித்து, பொன்னாடை அணிவித்து, செங்கோல்களை நினைவு பரிசாக வழங்கி கவுரவித்தார். விழாவுக்கு வர இயலாத முகுல் ரோஹ்தகிக்கும் முதல்வர் வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் வரவேற்புரையாற்றி முதல்வர் ஸ்டாலினுக்கு, அரசியலமைப்பு சட்டத்தின் முகப்பு உரையை, நினைவு பரிசாக வழங்கினார்.
பின்னர் நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:-
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை, ஆளுநர் என்ற நியமனப் பதவி மூலம் கட்டுப்படுத்தலாம் என்ற எண்ணத்துடன், போட்டி அரசுகளை நடத்த தொல்லைகள் கொடுக்கும் காலத்தில், மிக முக்கியமான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. இது தமிழகத்துக்கு மட்டுமின்றி, மக்களாட்சிக்கும், மாநில சட்டப்பேரவைகளின் உரிமைகளுக்கும் கிடைத்த மகத்தான வெற்றி.
ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு நிர்ணயித்தது மிகப்பெரிய வெற்றி. மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே இருக்கக்கூடிய அதிகாரப் பகிர்வில் மாநில அரசுகளின் உரிமைகளை எக்காலத்திலும் பாதுகாக்கும் வரலாற்று சாசனமாக இந்த தீர்ப்பு நிலைத்திருக்கும்.
இது இந்திய மாநிலங்களுக்கு தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தால் பெற்றுத் தந்திருக்கக் கூடிய மாபெரும் விடுதலை. வழக்குத் தாக்கல் செய்த தமிழகமும், வாதிட்ட வழக்கறிஞர்களும், தீர்ப்பளித்த நீதிபதிகளும் வரலாற்றில் என்றைக்கும் நிலைத்திருப்பார்கள் என்பது உறுதி. இந்த தீர்ப்பு தந்த நம்பிக்கையில்தான் மாநில சுயாட்சிக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக வழக்கறிஞர் வில்சன் பேசும்போது, “எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தங்களது பதவியை பயன்படுத்தி இடையூறு ஏற்படுத்தும் ஆளுநர்களுக்கு எதிராக வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழகத்துக்கு மட்டுமின்றி அனைத்து மாநிலங்களுக்குமானது” என்றார்.
தொடர்ந்து வழக்கறிஞர் ராகேஷ் திவேதி பேசும்போது, “ஆளுநர் என்பவர் மாநிலங்களில் அமைக்கப்படும் அமைச்சரவைக்கு ஆலோசனைகள் வழங்கலாமே தவிர, தனது வரம்பு மீறி நடந்து கொள்ளக்கூடாது. தற்போது உச்ச நீதிமன்றம் அதை சரிசெய்துள்ளது” என்றார்.
வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி பேசுகையில், “உண்மையாக செங்கோலுக்கு தகுதியுடையவர் முதல்வர் ஸ்டாலின்தான். பெரியார், அண்ணா, கருணாநிதியை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினும் தமிழகத்தை சரியான பாதையில் வழிநடத்தி கொண்டிருக்கிறார்” என்றார். இந்நிகழ்வில் மூத்த வழக்கறிஞர்கள், முன்னாள் நீதிபதிகள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் பலர் பங்கேற்றனர்.