தமிழ்ச் சமுதாயத்துக்கு ஒளி கொடுக்கும் பாவேந்தர் பாரதிதாசன் புகழ் ஓங்குக: மு. க. ஸ்டாலின்!

சென்னையில் மெரீனா கடற்கரையில் உள்ள பாரதிதாசன் திருவுருவச் சிலைக்கு கீழ் உள்ள திருவுருவப் படத்திற்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

புகழ்பெற்ற கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

வேழத்தின் வலிமையோடு – திகட்டாத தீந்தமிழின் சுவையில், மடமைகளைச் சுட்டெரித்து, இருண்ட வீட்டில் குடும்ப விளக்கேற்றிய இசையமுது பாவேந்தர் பாரதிதாசன் புகழ் ஓங்குக!

இல்வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் இணையரை வாழ்த்தும் போதெல்லாம், பாவேந்தர் எடுத்துச் சொல்லியபடி, வீட்டுக்கு விளக்காக – நாட்டுக்குத் தொண்டர்களாக வாழ்ந்திட வேண்டும் என்பதையே அறிவுரையாக வழங்குகிறேன்.

குன்றிலிட்ட விளக்காகத் தமிழ்ச் சமுதாயத்துக்கு ஒளி கொடுக்கும் பாவேந்தர் பாரதிதாசன் யாத்த வரிகளைத் தமிழர் நெஞ்சங்களில் ஏந்திப் பயணித்திடுவோம் இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, பாரதிதாசன் பிறந்தநாளையொட்டி, தமிழக அரசின் சார்பில் ‘தமிழ் வார விழா’ இன்று முதல் மே 5 வரை கொண்டாடப்படுகிறது. பாரதிதாசன் பிறந்தநாளையொட்டி சென்னையில் மெரீனா கடற்கரையில் உள்ள பாரதிதாசன் திருவுருவச் சிலைக்கு கீழ் உள்ள திருவுருவப் படத்திற்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அமைச்சர்கள், சென்னை மேயர் ப்ரியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.