“சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் 3,5,8-ம் வகுப்புகளில் இறுதித் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்தால் மீண்டும் அதே வகுப்பில் படிக்க வேண்டும் என்ற தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த உள்ளார்கள். இதற்கு ஒப்புக் கொண்டு பெற்றோர் கையெழுத்திடாமல், அதை எதிர்த்து கேள்வி எழுப்ப வேண்டும்” என்று திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.
திருச்சி விமான நிலையத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
புதிய கல்விக் கொள்கை என்ற தேசியக் கல்விக் கொள்கை வரைவாக இருந்தபோதே தற்போதைய முதலமைச்சர் அதனை எதிர்த்தார். கொரோனா காலத்தில் அவசர, அவசரமாக அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தற்போது, சிபிஎஸ்இ., கல்வித் திட்டத்தில் மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தேர்வில் தோல்வியடைந்தால், அவர்கள் மீண்டும் அதே வகுப்பில் படிக்க வேண்டும் என்ற தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தி உள்ளார்கள். இதன்மூலம் அந்த மாணவர்களுக்கும், அவர்களுடைய பெற்றோர்களுக்கும் மிகப் பெரிய அழுத்தத்தை தருகிறார்கள். சிறுவயதில் அந்தக் குழந்தைகள் அத்தகைய அழுத்தத்தை எப்படி தாங்கிக் கொள்ளும்.
நாங்கள் திமுகவை சார்ந்தவர்களின் குழந்தைகளுக்கு மட்டும் பேசவில்லை பாஜக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளை சார்ந்தவர்கள், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களுக்காகவும்தான் பேசுகிறோம். கல்வி உரிமைச் சட்டத்தின் படி மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தேர்வில் தோல்வி கிடையாது என்ற விதி உள்ளபோது இதுபோன்று மூன்றாம் வகுப்பிலேயே ஒரு மாணவனை தோல்வி அடையச் செய்தால், அவர்கள் இந்த கல்வி திட்டத்தில் இருந்தே வெளியேறி விடுவார்கள். இது பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றலை தான் அதிகரிக்கும். இதனால்தான் தமிழ்நாடு முதலமைச்சர் தொடர்ந்து இதனை எதிர்த்து வருகிறார்.
இந்தச் சூழலில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் பணியை மத்திய அரசு செய்து வருகிறது. மாணவர்களின் எதிர்காலத்தில் தேசிய கல்விக் கொள்கையின் மூலமாக விளையாடும் போது அதற்கு பெற்றோர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்ப வேண்டும். இதற்கு ஆதரவாக கையெழுத்து கேட்கும்போது கையெழுத்திடாமல் இந்த நடைமுறையை எதிர்த்து பெற்றோர்கள் கேள்வி கேட்க வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களின் நலனிலும் முதல்வர் மிகுந்த அக்கறை காட்டி வருகிறார். சிபிஎஸ்இ பயிலும் மாணவர்களுக்கான இந்த அறிவிப்பு இன்று காலையில் செய்தி ஊடகங்களில் வந்தவுடன், அதை பார்த்துவிட்டு முதலமைச்சர் பதற்றம் அடைந்து, இதுகுறித்து என்னிடம் பேசினார். நாளைய எதிர்காலம் இன்றைய மாணவர்கள் தான் என்பதில் முதலமைச்சர் உறுதியாக நம்புகிறார். சிபிஎஸ்இயில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள், தங்களுடைய பிள்ளைகள் தேர்வில் தோல்வி என்று கையெழுத்து போடச் சொன்னால் எதிலும் கையெழுத்து போடாமல் எதிர்த்துக் கேள்வி கேளுங்கள்.
என்சிஇஆர்டி மூலமாக வரலாற்றை மறைத்து, வரலாற்றை திரித்து இருக்கிறார்கள். நாம் தேசவிரோதி என படித்தவர்களை அவர்கள் தியாகி என மாற்றுகிறார்கள். என்.சி.ஆர்.இ.டி., (தேசிய கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு) உள்ளே நுழைந்தால் எஸ்.சி.ஆர்.இ.டி., (மாநிலக் கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு) காணாமல் போய்விடும்.
தரமான கல்வி கொண்டுவர வேண்டும் என்பதற்காகத்தான் முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை கொண்டு வருகிறார். செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கல்வியை ஆறாம் வகுப்பு முதல் கற்றுத் தர வேண்டும் என முடிவெடுத்து, அடுத்த கல்வி ஆண்டு முதல் அது அமல்படுத்தப்பட உள்ளது. ஒவ்வொரு குடிமகனையும் அறிவு சார்ந்து சிந்திக்க வைக்க வேண்டும். கல்வி உரிமைச் சட்டம் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டலின்படி கொண்டுவரப்பட்டது. ஆனால் அதற்கு எதிராகவே தற்போது மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் என்ன தேவை என்பதை அந்தந்த மாநிலம் தான் அறியும். இதில் பெரியண்ணன் மனப்பான்மையில் நாங்கள் கூறுவதை தான் செய்ய வேண்டும் என மத்திய அரசு செயல்படக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.