தமிழகத்தில் அரசியல் கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சியாக காங்கிரஸ் வளரவேண்டும், வரவேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளதாவது:-
தமிழக காங்கிரஸுக்கு எதிர்காலம் என்பது பெரும் சவாலானது. தமிழக அரசியலில் கட்சிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இரு திராவிட கட்சிகளும் பலமாக உள்ளது. திமுக, தொண்டர்கள் ரீதியாக அடிப்படை கட்டமைப்பை பலமாக வைத்துள்ளது. அடுத்தடுத்த தலைமுறைக்கான இளம் தலைவர்களை அக்கட்சி அறிமுகம் செய்து வருகிறது. அதை சீனியர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள். இன்னும் 25 ஆண்டுகளுக்கு தேர்தல் ரீதியிலான பிரச்சினைகளை எதிர்க்கொண்டு திமுக நீடித்து நிற்கும். அதேபோல் அதிமுக-வையும் குறைத்து மதிப்பிட முடியாது. இந்தக் கட்சிக்கும் கிராம அளவில் வலுவான கட்டமைப்பு இருக்கிறது. அதனாலேயே அந்தக் கட்சியுடன் சேர்ந்து தமிழகத்தில் காலூன்ற நினைக்கிறது பாஜக.
இரு திராவிட கட்சிகளும் வேண்டாம் என்ற தாக்கம் இருந்தாலும் மக்கள் எப்போது முடிவெடுக்கப் போகிறார்களோ அப்போதுதான் அது நிறைவேறும். அண்ணாமலை வருகைக்கு பின் தமிழகத்தில் பாஜக சற்று வளர்ந்திருப்பதாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், மக்களவை தேர்தல் வரும்போது, மட்டுமே பேசும் கட்சியாக காங்கிரஸ் உள்ளது. திமுக, அதிமுக, தவெக போன்ற கட்சிகளில் ஒருவரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தும் போது காங்கிரஸில் மட்டும் அப்படியொரு நிலை இல்லையே என, மக்கள் யோசிக்கின்றனர்.
கூட்டணியில் இருந்தாலும் மக்கள் பிரச்சினைகளைப் பற்றி பேசவேண்டும். காங்கிரஸ் அப்படிப் பேசுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. தேசிய கட்சியாக தனிப்பட்ட கருத்துகளை வெளிப்படுத்த வேண்டும். நடை, உடை, பாவனையை மாற்றி தமிழகத்தில் அரசியல் கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சியாக காங்கிரஸ் வளரவேண்டும்; வரவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.