நில அபகரிப்பு வழக்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா ஆகியோர் வரும் மே 23-ம் தேதி குற்றச்சாட்டுப் பதிவுக்காக கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும். ஒருவேளை ஆஜராகாவிட்டாலும், குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும் என சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சென்னை கிண்டி தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சிட்கோ நிலத்தை அமைச்சர் மா.சுப்ரமணியன், சென்னை மாநகர மேயராக பதவி வகித்தபோது தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி அந்த நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக தனது மனைவி காஞ்சனா பெயருக்கு மாற்றி நில அபகரிப்பில் ஈடுபட்டுள்ளதாக பார்த்திபன் என்பவர் போலீஸில் புகார் அளித்தார்.
அதன்பேரில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா மீதும் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த 2019-ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தற்போது சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி-எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜி. ஜெயவேல் முன்பாக நடந்து வருகிறது. தன்மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்திருந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, இந்த வழக்கு கடந்த மாதம் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அமைச்சரவைக் கூட்டம் நடந்ததால் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சார்பில் நேரில் ஆஜராக விலக்கு அளிக்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அதையேற்ற நீதிபதி ஜெயவேல், இந்த வழக்கின் குற்றச்சாட்டுப்பதிவுக்காக அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா ஆகியோர் வரும் மே 6-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் பிறப்பித்து உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, இந்த வழக்கு இன்று (மே 6) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இருவரும் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கை வரும் மே 23-ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, அன்றைய தினம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா கட்டாயம் குற்றச்சாட்டுப்பதிவுக்காக நேரில் ஆஜராக வேண்டும். ஒருவேளை அவர்கள் ஆஜராகாவிட்டாலும் அன்றையதினம் குற்றச்சாட்டுப் பதிவு பதிவு செய்யப்படும் என அறிவித்து விசாரணையை தள்ளிவைத்தார்.