“துல்லியமாக திட்டமிடப்பட்டு எந்த ஒரு சிறு தவறும் நடைபெறாத வண்ணம் பகல்காம் தாக்குதலுக்கு சிறப்பான பதிலடியை நமது ராணுவம் வழங்கியுள்ளது” என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
‘ஆபரேசன் சிந்தூர்’ நடவடிக்கையைத் தொடர்ந்து நாளை (மே 8) காலை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. காலை 11 மணியளவில் நாடாளுமன்ற நூலக கட்டிடத்தில் இந்தக் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது எக்ஸ் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், ‘ஆபரேசன் சிந்தூர்’ எதிரொலியாக, பிரதமர் மோடி அவரது ஐரோப்பிய பயணத்தை ஒத்திவைத்துள்ளார் என்பதும் கவனிக்கத்தக்கது.
‘ஆபரேசன் சிந்தூர்’ குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்களின் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அப்போது, “துல்லியமாக திட்டமிடப்பட்டு எந்த ஒரு சிறு தவறும் நடைபெறாத வண்ணம் பகல்காம் தாக்குதலுக்கு சிறப்பான பதிலடியை நமது ராணுவம் வழங்கியுள்ளது. முன்கூட்டியே செய்யப்பட்ட விரிவான தயாரிப்புகளின் அடிப்படையை கண்டிப்பாக பின்பற்றி ராணுவம் இப்பணியை மேற்கொண்டது. பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்காத பயங்கரவாதிகளை மட்டும் குறிவைத்து வேட்டையாடிய நமது ராணுவத்தின் செயல் மிகவும் பாரட்டத்தக்கது. பெருமை கொள்ளத்தக்கது” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மத்திய அமைச்சர்கள் ஒருமனதாக நம்பிக்கை தெரிவித்தனர். மேலும், மேசைகளை தட்டி அரசின் நடவடிக்கையை அவர்கள் வரவேற்றனர். பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் பிரதமர் மோடி மற்றும் நமது ராணுவ அமைப்புடன் இந்த தேசமே துணை நிற்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்த தாக்குதல் குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள மார்கோ ரூபியோ, “இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நிலைமையை நான் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறேன். இரு தரப்பு தலைமையுடனும் நான் தொடர்பில் இருக்கிறேன். இது விரைவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கிறேன். அமைதியான தீர்வை நோக்கி இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைமைகள் ஈடுபடும் என்ற ட்ரம்ப்பின் கருத்துக்களை நான் எதிரொலிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.