தில்லியே திரும்பிப் பார்க்கும் நம்முடைய மாதிரிப் பள்ளி: முதல்வர் ஸ்டாலின்!

தில்லியே திரும்பிப் பார்க்கும் வகையில் நம்முடைய மாதிரிப் பள்ளி உருவாகியிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

பள்ளிக் கல்வித் துறை சார்பில் திருச்சிராப்பள்ளி, துவாக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் ரூ. 19.65 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள திருச்சிராப்பள்ளி மாவட்ட அரசு மாதிரிப் பள்ளிக்கான புதிய கட்டடத்தையும், தரை மற்றும் நான்கு தளங்களுடன் தலா 18.91 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாணவர் மற்றும் மாணவியர்களுக்கான தனித்தனி விடுதிக் கட்டடங்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 8) திறந்து வைத்தார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் கூறியுள்ளதாவது:-

கடந்த 2022-ஆம் ஆண்டு தில்லிப் பயணத்தின்போது, அங்கு நான் கண்ட மாதிரிப் பள்ளிகள் போல் தமிழ்நாட்டிலும் உருவாக்கப்படும் என்றேன். சொன்னபடி, மாவட்டத்திற்கு ஒன்று என 38 மாதிரிப் பள்ளிகளை உருவாக்கினோம். இப்போது அதற்கான நிரந்தர உட்கட்டமைப்பை உருவாக்கி, முதல் கட்டடத்தை திருச்சி மாவட்டம் துவாக்குடியில் திறந்து வைத்திருக்கிறேன்! தில்லியே திரும்பிப் பார்க்கும் வகையில் நம்முடைய மாதிரிப் பள்ளி உருவாகியிருக்கிறது!

ஏற்கெனவே நம்முடைய மாதிரிப் பள்ளிகளில் பயின்ற 977 மாணவர்கள் நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களிலும் – பன்னாட்டுக் கல்வி நிறுவனங்களிலும் பயிலுகின்றனர். இந்த மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர உழைப்போம்! அரசுப் பள்ளிகளைப் பெருமையின் அடையாளமாக மாற்றி வரும் அமைச்சர் அன்பில் மகேஸ் மற்றும் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுக்கு வாழ்த்துகள்! பாராட்டுகள்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.