பிராந்திய ராணுவப் படையை களமிறக்க ராணுவத் தளபதிக்கு அதிகாரம்: மத்திய அரசு!

அத்தியாவசிய பாதுகாப்பை வழங்க, வழக்கமான ராணுவ வலிமையை ஆதரிக்க எந்த ஒரு அதிகாரியையும் அழைக்க ராணுவத் தளபதிக்கு மத்திய அரசு அதிகாரம் அளித்துள்ளது.

இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

பிராந்திய ராணுவ விதி 1948-ன் விதி 33 ஆல் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கு, ராணுவத் தளபதிக்கு மத்திய அரசு அதிகாரம் அளிக்கிறது. பிராந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட ஒவ்வொரு அதிகாரியையும் ஒவ்வொரு நபரையும் அத்தியாவசிய பாதுகாப்பை வழங்கவோ, வழக்கமான ராணுவ அதிகரிப்புக்காகவோ பணியமர்த்தப்பட அழைக்க அதிகாரம் வழங்கப்படுகிறது.

இதன்படி, தற்போதுள்ள 32 காலாட்படை பட்டாலியன்களில், தெற்கு கட்டளை, கிழக்கு கட்டளை, மேற்கு கட்டளை, மத்திய கட்டளை, வடக்கு கட்டளை, தென்மேற்கு கட்டளை, அந்தமான் மற்றும் நிக்கோபார் கட்டளை மற்றும் ராணுவ பயிற்சி கட்டளை (ARTRAC) ஆகிய பகுதிகளில் பணியமர்த்த அதிகாரம் அளிக்கப்படுகிறது.

மேலும், பட்ஜெட் நிதி அல்லது பட்ஜெட்டில் உள்ள உள் சேமிப்புகளை மீண்டும் ஒதுக்கவும் அதிகாரம் அளிக்கப்படுகிறது. பாதுகாப்பு அமைச்சகம் அல்லாத பிற அமைச்சகங்களின் உத்தரவின் பேரில் உருவாக்கப்பட்ட பிரிவுகளுக்கு, செலவு அந்தந்த அமைச்சகங்களுக்குப் பற்று வைக்கப்படும். பாதுகாப்பு அமைச்சகத்தின் பட்ஜெட் ஒதுக்கீட்டில் சேர்க்கப்படாது. இந்த உத்தரவு 10 பிப்ரவரி 2025 முதல் 09 பிப்ரவரி 2028 வரை மூன்று ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாட்டின் பாதுகாப்பு சூழல் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் இன்று ஆய்வு மேற்கொண்டார். பாதுகாப்புப் படைத் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான், ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, விமானப்படைத் தலைமைத் தளபதி ஏ.பி. சிங், கடற்படைத் தலைமைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே. திரிபாதி, பாதுகாப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் ஆகியோர் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில், நாட்டின் பாதுகாப்பு நிலைமையின் ஒவ்வொரு அம்சமும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

“மேற்கு எல்லையில் உள்ள பாதுகாப்பு நிலைமை மற்றும் இந்திய ஆயுதப்படைகளின் தயார்நிலையை மறுஆய்வு செய்வதற்காக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உயர்மட்டக் கூட்டத்துக்கு தலைமை தாங்கினார்” என்று பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.