இந்தியா – பாகிஸ்தான் இடையே நீடித்த போர் பதற்றம் நேற்றுடன் தணிந்துள்ளது. இருநாடுகளுக்கும் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், நிலையை மேலும் பதற்றம் ஆக்காமல் போர் நிறுத்தம் மேற்கொண்ட அரசின் நடவடிக்கையை புத்திசாலித்தனமானது என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பாராட்டியுள்ளார்.
இந்தியா – பாகிஸ்தான் இடையே கடந்த 4 நாட்களாக நீடித்து வந்த போர் பதற்றம் முடிவுக்கு வந்தது. இரு தரப்பும் தாக்குதலை நிறுத்திக்கொள்வது என்று நேற்று ஒப்புக்கொண்டது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது சமூக வலைத்தள பக்கத்தில் போர் நிறுத்தத்திற்கு இருநாடுகளும் ஒப்புக்கொண்டு இருப்பதாக அறிவித்த சிறிது நேரத்தில் மத்திய அரசும் போர் நிறுத்தம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. இந்த போர் நிறுத்த அறிவிப்பால் எல்லையில் கடந்த 4 நாட்களாக நிலவி வந்த பதற்றமானது தணிந்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் இன்று இயல்பு நிலை திரும்பியுள்ளது. ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் ஆகிய எல்லையோர மாநிலங்களிலும் பதற்றம் குறைந்துள்ளது. சண்டை நிறுத்தத்திற்கு இருநாடுகளும் ஒப்புக்கொண்டதையடுத்து அமலுக்கு வந்துள்ளது. எனினும் பாகிஸ்தான் எல்லையில் ஏதேனும் அத்துமீறலில் ஈடுபடலாம் என்பதால் பாதுகாப்பு படை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
இதற்கிடையே, மத்திய அரசின் முடிவுக்கு காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரமும் பாராட்டு தெரிவித்துள்ளார். பிரபல தனியார் ஆங்கில தொலைக்காட்சி இந்தியா டுடே இந்த தகவலை தெரிவித்துள்ளது ப.சிதம்பரம் கூறியதாக அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
பெரிய அளவிலான போரின் ஆபத்தை பிரதமர் மோடி உணர்ந்து, இலக்குகளை தேர்வு செய்து மட்டுப்படுத்தப்பட்ட ராணுவ நடவடிக்கை என்ற புத்திசாலித்தனமான முடிவை எடுத்து இருக்கிறார். இந்திய ராணுவம் ஏவுகணைகளையும் டிரோன்களையும் 9 இடங்களில் ஏவியுள்ளது. பாகிஸ்தானில் 4 இடங்களில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 5 இடங்களிலும் என 9 பயங்கரவாத கட்டமைப்புகள் அழிக்கபட்டுள்ளன. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் ராணுவ சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட ஒரு நாட்டின் நியாயமான பதிலாக இது அமைந்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள ராணுவ பாஸ்கள் இதற்கு ஆக்ரோஷமாக பதிலடி கொடுக்க மாட்டார்கள் எனக்கருதுவது அப்பாவித்தமனாதாக இருந்து இருக்கும்.
அதேபோல, தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (டிஆர்எப்) மற்றும் லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ முகம்மது ஆகிய பயங்கராவத இயக்கங்களின் தளங்களும் 7 ஆம் தேதி கொடுத்த பதிலடியில் முற்றிலும் துடைத்தெறியப்பட்டு இருக்கும் என கருதுவதும் முதிர்ச்சியற்றதாக இருக்கும். சில தலைவர்கள் கொல்லப்பட்டு இருக்கலாம். ஆனால் அவர்களின் லீடர்ஷிப் என்பது அப்படியே தான் இருக்கும். கொல்லப்பட்ட தலைவர்களின் இடத்திற்கு புதியவர்கள் வந்துவிடும் திறன் உள்ளது என்பதை கடந்த காலங்களில் நிரூபித்து இருக்கிறார்கள். ஆர்வமாக உள்ள இளைஞர்களை தேர்வு செய்து இந்தியாவுக்கு எதிராக செயல்களில் ஈடுபடுத்த பயிற்சி அளிக்கப்படுகிறார்கள். அவர்களின் உயிரை கூட தியாகம் செய்ய வைக்கிறார்கள்.
பாகிஸ்தானில் ராணுவ தலைவர்களும் உளவு அமைப்பான ஐஎஸ் ஐயும் முழு கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும் வரை இந்தியாவுக்கு எதிரான அச்சுறுத்தல் ஓய்ந்துவிடாது. ராணுவ மோதல்கள் ஏற்பட்டால் உயிரிழப்புகளும் பொருட்சேதமும் இருபக்கமும் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக இருக்கும். ஒருபக்கம்தான் இழப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்க முடியாது. எல்லையில் நடந்த அத்துமீறலில் பொதுமக்கள் உயிரிழந்தது வேதனைக்குரியது. ஆனால் சில உயிரிழப்புகள் தவிர்க்க முடியாதது. போர் என்பது இரக்கமற்றது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.