சென்னை அருகே பள்ளி மாணவியிடம் அத்துமீறல்: சிறார்கள் உள்பட 12 பேர் கைது!

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தில் 8 ஆம் படித்து வந்த பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 7 சிறுவர்கள் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் உடந்தையாக இருந்ததாக அந்த சிறுமியின் தாயும் கைது செய்யபட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் சிறுமி வீட்டில் இருந்து வந்துள்ளார். தாயும், தந்தையும் வேலைக்கு சென்றுவிடுவார்கள். வீட்டில் சிறுமி மட்டும் தனியாக இருந்துள்ளார். இதை நோட்டமிட்ட அப்பகுதியை சேர்ந்த சிறுவன் தண்ணீர் கேன் போடுவது போல் வீட்டுக்கு வந்து சிறுமியிடம் பேச்சு கொடுத்துள்ளார். அப்போது சிறுமி சரியாக பேசவில்லை என்று கூறப்படுகிறது. எனினும் அவ்வப்போது வீட்டுக்கு தண்ணீர் கேன் போடுவதாக கூறி சென்று சிறுமியுடன் பேசியிருக்கிறார். பின்னர் சிறுமியும் பேச இருவரும் நண்பர்களாக பேசி வந்துள்ளனர். திடீரென ஒருநாள் சிறுவன் சிறுமியை விரும்புவதாக கூறியிருக்கிறார். சிறுமியும் காதலிப்பதாக கூறியிருக்கிறார். இதன் பின்னர் இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்தனர். சிறுமியின் வீட்டில் ஆள் இல்லாத நேரம்பார்த்து வீட்டுக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்த சிறுவன், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இப்படி அடிக்கடி இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

இது ஒரு நாள் சிறுவனின் நண்பர்களுக்கு தெரிந்துள்ளது. இதையடுத்து அவர்களையும் ஒரு நாள் சிறுவன் வீட்டுக்கு அழைத்து சென்றிருக்கிறான். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய சிறுவனின் நண்பர்களும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் அடிக்கடி அரங்கேறியதாக கூறப்படுகிறது. நாட்கள் செல்ல செல்ல சிறுமி சோர்வடைந்து காணப்பட்டு இருக்கிறார். அவரது செயல்பாடுகளில் வித்தியாசம் தெரிந்ததால், அவரது தாய் சிறுமியை அழைத்துக்கொண்டு குரோம்பேட்டை ஆஸ்பத்திரிக்கு சென்றார். ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பரிசோதனையில், சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிறுமி செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டாள். மேலும் இது தொடர்பாக குழந்தைகள் நல குழுமம் சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து சிறுமியின் தாய் பல்லாவரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், கிழக்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் (வயது 19), சஞ்சய் (19), முடிச்சூரை சேர்ந்த சூர்யா (22), ஈசா பல்லாவரத்தை சேர்ந்த நிக்சன் (22) ஆகிய 4 பேர் மற்றும் 8 சிறுவர்கள் என மொத்தம் 12 பேர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்தனர். இதையடுத்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறுவர்கள் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும், வாலிபர்களை புழல் சிறையிலும் அடைத்தனர்.

இது தொடர்பான போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. சிறுமியிடம் இதேபோல் ஏராளமானவர்கள் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும், இதற்கு சிறுமியின் தாயாரும் உடந்தையாக இருந்ததாக போலீசார் கைது செய்தனர். முன்னதாக சிறுவர்கள் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்து ஜீப்பில் அழைத்து சென்ற போது எதோ சுற்றுலாவுக்கு அழைத்து செல்வது போல சிரித்து மகிழ்ந்தபடி வந்தது போலீசாரையே அதிர்ச்சியடைய செய்தது.