அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறுவதெல்லாம் ‘ஹம்பக்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், “பொய் மற்றும் பித்தலாட்டம் செய்வது தான் பழனிசாமியின் வேலையாக இருக்கிறது” என்றும் சாடியுள்ளார்.
ஊட்டியில் 25 ஏக்கர் பரப்பளவில் ரூ.143.69 கோடி ரூபாய் செலவில் 700 படுக்கைகளுடன் நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை கடந்த மாதம் தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (மே 14) அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று அதன் செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்து, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும், மருத்துவமனையில் உள்ள நோயாளிகளிடம் மருத்துவ வசதிகள் குறித்தும், அவர்களது தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, சிகிச்சைக்கு வரும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், மருத்துவமனைக்கு நேரில் வந்து சிகிச்சை பெற முடியாத நோயாளிகளுக்கு “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டம், சாலை விபத்துகளில் காயமடைந்தவர்களுக்கு “இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48” திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் மருத்துவர்களிடம் அறிவுறுத்தினார்.
மேலும், பயிற்சி மருத்துவர்களிடம் கலந்துரையாடி, சிகிச்சைக்கு வரும் மக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். அத்துடன் மருத்துவப் பணியாளர்களின் வருகை பதிவேடுகள், மருந்து இருப்பு பதிவேடுகள் ஆகியவற்றையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதைத் தொடர்ந்து, நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது மருத்துவக் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடியபோது, வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமைத் தேடி தரும் வகையில் சேவை மனப்பான்மையுடன் மருத்துவப் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். பின்னர், மருத்துவக் கல்லூரி மாணவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:-
கடந்த ஏப்ரல் மாதம் திறந்து வைத்த நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் செயல்பாடுகளை இன்று நேரில் ஆய்வு செய்தேன். ரூ.143 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இம்மருத்துவமனை மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தினசரி 1300 வெளிநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறன்றனர். மேலும், உள்நோயாளிகள் சிகிச்சையும் சிறப்பாக அளிக்கப்பட்டு வருகிறது.
தனியார் மருத்துவமனையில் அதிக கட்டணம் செலுத்தி எடுத்து வந்த எம்ஆர்ஐ, சிடி ஸ்கேன் போன்றவை கட்டணமில்லாமல் தற்போது நோயாளிகள் எடுத்து வருகின்றனர். மருத்துவக் கல்லூரி மாணவர்களை நேரில் சந்தித்த போது, அவர்களுக்கு செய்து தரப்பட்டுள்ள வசதிகள் குறித்தும், தேவைகள் குறித்தும் கேட்டறிந்தேன், அப்போது எந்த குறையுமில்லாமல் சிறப்பாக உள்ளதாக அம்மாணவர்கள் தெரிவித்தனர். தேவைப்படும் கூடுதல் வசதிகளையும் செய்து தர அரசு தயாராக உள்ளது, என்று அவர்களிடம் தெரிவித்தேன். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, அரசு தலைமைக் கொறடா கா. ராமச்சந்திரன், நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் எம்.கீதாஞ்சலி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
முன்னதாக, இன்று காலை அவர் தாவரவியல் பூங்கா அருகேயுள்ள மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட விளையாட்டு மைதானத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:-
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்படும் என கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதே உறுதியளித்தேன். யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவர் எனக் கூறியிருந்தேன். சட்டப்பேரவையில் பேசும்போது ‘பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி’ எனப் பேசினேன். தற்போது, அந்த வழக்கில் தீர்வு வழங்கப்பட்டது. இதேபோல கோடநாடு வழக்கிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர். ஆனால், எடப்பாடி பழனிசாமி தான்தான் பொள்ளச்சி வழக்கில் நீதி கிடைத்ததற்குக் காரணம் எனப் பேசிவருகிறார்.
அவர் அமித்ஷாவை பார்த்தார். எதற்குப் பார்த்தார் என ஊருக்கே தெரியும். இந்நிலையில், 100 நாள் வேலை திட்டம், மெட்ரோ திட்ட அகியவற்றுக்கு நான் தான் அமித்ஷாவிடம் கூறினேன் என சொல்லி வருகிறார். இதெல்லாம் ‘ஹம்பக்’. பொய் மற்றும் பித்தலாட்டம் செய்வது தான் பழனிசாமியின் வேலையாக இருக்கிறது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ராணுவ வீரர்களை கொச்சைப்படுத்தி பேசியுள்ளார். அவர் ஒரு கோமாளி. எனவே, அதை பெரிதுப்படுத்த விரும்பவில்லை.
ஊட்டியில் உள்ள மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட விளையாட்டு அரங்கம் சிறப்பு வாய்ந்தது. இங்கு, தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களிலிருந்து வீரர்கள் வந்து பயிற்சி பெறுகின்றனர். தமிழ்நாடு முழுவதுமே இது போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருவகிறோம். அதிமுக ஆட்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் யார் என்றே தெரியாது?. ஆனால் தற்போது யார் விளையாட்டுத் துறை அமைச்சர் என்பது உங்களுக்கு தெளிவாக தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.