தூய்மைப் பணியாளர்களை தொழில்முனைவர்களாக மாற்றும் திட்டம் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் பதிவுகளை சமர்பிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தூய்மைப் பணியாளர்களை தொழில்முனைவர்களாக மாற்றும் திட்டத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
யூடியூபர் சவுக்கு சங்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “தூய்மைப் பணியாளர்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் அவர்களை தொழில்முனைவோர்களாக மாற்றுவதற்கான அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதேபோல, துாய்மை பணியாளர்களுக்கு 50 சதவீத மானியத்துடன் நவீன கழிவுநீர் அகற்றும் ஊர்திகள், உபகரணங்கள் வழங்கும் மத்திய அரசின் ‘நமஸ்தே திட்டம்’ அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களை செயல்படுத்தியதில் முறைகேடுகள் நடந்துள்ளன.
இந்த திட்டங்களை அமல்படுத்தும் பணிகள் சட்டவிரோதமாக தலித் இந்திய வர்த்தக மற்றும் தொழில் சபை என்ற தனியார் அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை முக்கியப் பங்கு வகித்துள்ளார். தூய்மைப் பணியாளர்களுக்கு அதிகாரம் வழங்க ஒதுக்கப்பட்ட பெருந்தொகை உண்மையான பயனாளிகளுக்கு சென்று சேரவில்லை.
இந்த முறைகேடுகளை அம்பலப்படுத்தியதற்காக தூய்மை பணியாளர்கள் உடையில் வந்த சமூக விரோதிகள் தனது வீட்டில் கழிவு நீரைக் கொட்டி வன்முறையில் ஈடுபட்டனர். இந்த முறைகேடு தொடர்பாக புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தனது புகாரின் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த சிபிஐக்கு உத்தரவிட வேண்டும்” என்று அந்த மனுவில் கோரியுள்ளார்.
சவுக்கு சங்கரின் மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமிநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது. அப்போது, இந்த வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசின் பதிவுகளை வெள்ளிக்கிழமைக்குள் சமர்ப்பிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.