தமிழ்நாட்டில் கடந்த ஆண்டைவிட 52% குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதற்கு மாநில அரசுதான் முழு பொறுப்பு என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
சென்னையில் இருந்து வந்தே பாரத் ரயில் மூலம் திருச்சி வருகை தந்த மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு திருச்சி மாவட்ட பாஜக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் அவர் கூறியதாவது:-
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பெண்களுக்கு நீதி கிடைத்திருக்கிறது. நல்ல தீர்ப்பு வந்துள்ளது. தமிழ்நாட்டில் தினந்தோறும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கொலை, கொள்ளை, மது பழக்கம், பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துள்ளன.
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 52% குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மாநில அரசு இதற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். இதற்கு அடிப்படை காரணம் மது பழக்கம்தான். தமிழ்நாடு அரசு குற்றச் சம்பவங்களை தடுக்க எந்த கவனத்தையும் செலுத்தவில்லை. கொடநாடு கொலை வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எங்களது எண்ணம். இவ்வாறு அவர் கூறினார்.