சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மின் அஞ்சல் மூலம் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மின் அஞ்சல் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் மோப்ப நாய் உதவியுடன் பல்கலைக்கழகத்தில் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இதுவரை மொத்தம் 17 முறை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.