முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருப்பதாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் இதயத்தில் ஓபிஎஸ் அண்ணனுக்கு தனி இடம் இருப்பதாக கூறிய அண்ணாமலை, பாஜக கூட்டணியில் இருந்து எந்தக் கட்சியும் பிரிந்து செல்லவில்லை என்று தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்த போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தியதோடு, கூட்டணியையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து அதிமுக – பாஜக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம்பெறுவார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஏனென்றால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அமமுக மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் பாஜக கூட்டணியில் இடம்பெற்றனர். அதற்கேற்ப 2026 சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக – பாஜக கூட்டணியில் அமமுக மற்றும் ஓபிஎஸ் சேர்த்துக் கொள்ளப்படுவார்களா என்ற குழப்பம் எழுந்தது. இன்னொரு பக்கம் அமமுகவின் டிடிவி தினகரன், தாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோம் என்று கூறி வருகிறார்.
இதனிடையே முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதனிடையே செய்தியாளர்களை சந்தித்து ஓபிஎஸ் பேசுகையில், சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எங்களை அழைக்காதது வருத்தமே. நாங்கள் இதுவரை தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருக்கிறோம் என்று தெரிவித்தார். ஓபிஎஸ் நேரடியாகவே அமித் ஷா சந்திக்காதது வருத்தம் என்று கூறியதால், பாஜகவால் கழற்றிவிடப்பட்டதாக சில விவாதங்கள் எழுந்தன.
இந்த நிலையில் திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்து பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் அண்ணாமலை பேசுகையில், ஊட்டியில் வெயில் குறைவு என்பதால், முதலமைச்சருக்கு சிறிய குழப்பம் இருந்திருக்கலாம். சென்னைக்கு வந்தபின் 2026ல் திமுக தோல்வியடைந்துவிடும் என்பது தெளிவாக புரிந்துவிடும். ஓபிஎஸ் ஐயாவின் கருத்துகளுக்கு எங்களின் தலைவர்கள் பதில் சொல்லிவிடுவார்கள். எல்லோரும் எங்களுடன்தான் இருக்கிறார்கள். யாரும் பிரிந்து செல்லவில்லை. பாஜக கூட்டணி வலுவாகவே இருக்கிறது. திமுகவில் இருப்பவர்கள் எங்கள் கூட்டணியில் குழப்பத்தை விளைவிக்கிறார்கள். நான் ஒரு தொண்டனாக பணியை செய்து கொண்டிருக்கிறேன். கூட்டணி தொடர்பாக விவகாரங்களில் ஒதுங்கி இருக்கிறேன். ஓபிஎஸ் அண்ணன் எப்போதும் எங்களுடன் இருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடியின் இதயத்தில் ஓபிஎஸ் அண்ணனுக்கு சிறப்பான இடம் இருக்கிறது. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.