தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாக ஆக்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளை அடையாளம் காணப்பட்டது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக 240 ஆவணங்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகவும், அவற்றை தாக்கல் செய்ய இரண்டு நாட்கள் அவகாசம் போதாது என்பதால், கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சவுக்கு சங்கர் தொடர்ந்த இந்த வழக்கில் அரசுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தூய்மை பணியாளர்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் அவர்களை தொழில் முனைவோர்களாக மாற்றுவதற்கான அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. அதேபோல, துாய்மை பணியாளர்களுக்கு, 50 சதவீத மானியத்துடன், நவீன கழிவுநீர் அகற்றும் ஊர்திகள், உபகரணங்கள் வழங்கும் மத்திய அரசு, நமஸ்தே திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களை செயல்படுத்தியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம் சாட்டி இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என யூடியூபர் சவுக்கு சங்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில், யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மனுவில் கூறுகையில், “தூய்மைப் பணியாளர்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் அவர்களை தொழில்முனைவோர்களாக மாற்றுவதற்கான அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. அதேபோல, துாய்மை பணியாளர்களுக்கு 50 சதவீத மானியத்துடன் நவீன கழிவுநீர் அகற்றும் ஊர்திகள், உபகரணங்கள் வழங்கும் மத்திய அரசின் ‘நமஸ்தே திட்டம்’ அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களை செயல்படுத்தியதில் முறைகேடுகள் நடந்துள்ளன. இந்த திட்டங்களை அமல்படுத்தும் பணிகள் சட்டவிரோதமாக தலித் இந்திய வர்த்தக மற்றும் தொழில் சபை என்ற தனியார் அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை முக்கியப் பங்கு வகித்துள்ளார். தூய்மைப் பணியாளர்களுக்கு அதிகாரம் வழங்க ஒதுக்கப்பட்ட பெருந்தொகை உண்மையான பயனாளிகளுக்கு சென்று சேரவில்லை. இந்த முறைகேடுகளை அம்பலப்படுத்தியதற்காக தூய்மை பணியாளர்கள் உடையில் வந்த சமூக விரோதிகள் தனது வீட்டில் கழிவு நீரைக் கொட்டி வன்முறையில் ஈடுபட்டனர். இந்த முறைகேடு தொடர்பாக புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தனது புகாரின் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த சிபிஐக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கில் இரண்டு நாளில் பதில் அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் பதில் அளித்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது தமிழக அரசுத்தரப்பில், 2023ம் ஆண்டு துவங்கப்பட்ட திட்டம் சிறப்பான முறையில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய தூய்மைப் பணியாளர்கள் அமைப்பின் பரிந்துரைப்படி, பயனாளிகளை அடையாளம் காண தலித் இந்திய வர்த்தக சபையை நியமித்துள்ளதாகவும், மாநில காவல் துறைக்கு எந்த புகாரும் அளிக்காமல் நேரடியாக சிபிஐ வழக்குப்பதிவு செய்யக் கோர முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது.
அதேபோல, 240 ஆவணங்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகவும், அவற்றை தாக்கல் செய்ய இரண்டு நாட்கள் அவகாசம் போதாது என்பதால், கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் எனவும், மனுதாரரின் உண்மைத்தன்மையை தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது. அரசுத்தரப்பு கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், விசாரணையை மே 21ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.