தமிழகத்தில் எந்த இடத்தில் பெண்கள் பாதிக்கப்பட்டாலும் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த அதிமுக தயங்காது என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை பல் மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் ஒரு துறையின் தலைவர், உடன் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் மாணவிகளிடம் ஆபாச வார்த்தைகளைப் பேசுவது, உடல் உருவ அமைப்பை கேலி செய்வது, அவர்களை வீடியோ படங்கள் எடுப்பது, பேசுவதை ரெக்கார்டு செய்வது போன்ற தகாத செயல்களில் ஈடுபட்டு வருவதால், அக்கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியைகளும், மாணவிகளும் தினம் தினம் மனஉளைச்சலைச் சந்தித்து அவதியுற்று வருகின்றனர்.
ஒரு துறையின் தலைவர் இவ்வாறு நடந்துகொள்வதை கண்டித்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டியும், பாதிக்கப்பட்ட பெண்கள் கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதமே கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். ஆனால், பல் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக, பாதிக்கப்பட்ட ஒரு பேராசிரியை இந்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
பெண்கள் பணிபுரியும் இடங்களில் `விசாகா கமிட்டி’ அமைக்கப்பட வேண்டும் என்ற வழிகாட்டுதல் என்ன ஆனது, மாணவிகள் புகார் கொடுத்தும் ஒரு ஆண்டு காலமாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை, எந்த அரசியல் தலைவரின் தலையீடு இதற்கு காரணம், யாருடைய அழுத்தம்?
ஏற்கெனவே, அண்ணா பல்கலைக்கழக பாலியல் புகாரில் `விசாகா கமிட்டி’ பற்றி அமைச்சர் ஒரு பதிலும், காவல் ஆணையாளர் ஒரு பதிலும் கூறி இருந்தது அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்தது. முதல்வரின் நிர்வாகச் சீர்கேட்டால் இன்று தமிழகம், பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாகத் திகழ்கிறது. பெண் பிள்ளைகளை பள்ளிக்கும், கல்லூரிக்கும் அனுப்புவதற்கே பெற்றோர் அஞ்சி நடுங்கும் நிலை, இந்த நீர்வாகச் சீர்கேடான ஆட்சியில் ஏற்பட்டுள்ளது கொடுமையிலும் கொடுமை. இதற்கொரு முடிவு கட்டும்வரை நாங்கள் ஓயமாட்டோம்.
இன்று கல்வியை கற்றுக்கொடுக்கும் கல்வி வளாகங்களிலேயே பாலியல் வன்கொடுமைகளும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் நடைபெறுவதற்கு, எனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். நிர்வாகத் திறமையற்ற முதல்வர் ஸ்டாலின், இனியாவது பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் எந்த இடத்தில் பெண்கள் பாதிக்கப்பட்டாலும், மாநிலம் தழுவிய போராட்டத்தை அதிமுக முன்னெடுக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.