டெல்லியில் சோனியா காந்தியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!

டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார்.

டெல்லி பாரத் மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை சனிக்கிழமை நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். பின்னா் அன்றைய தினம் இரவு 7.30 மணிக்கு பயணிகள் விமானம் மூலம் புறப்பட்டு இரவு 11.30 மணிக்கு சென்னை வந்தடைகிறாா்.

டெல்லி விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினை, திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, ஜெகத்ரட்சகன், பி.வில்சன், தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், புதுடெல்லி தமிழ்நாடு இல்லத்தின் உள்ளுறை ஆணையர் ஆஷிஷ் குமார், ஆகியோர் சால்வை அணிவித்து மலர்கொத்து வழங்கி வரவேற்றனர்.

முந்தைய ஆண்டுகளில் நீதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த முதல்வர் ஸ்டாலின், இந்தாண்டு கூட்டத்தில் பங்கேற்று, தமிழகத்துக்கு தேவையான நிதி குறித்து முறையிடப் போவதாக ஏற்கெனவே விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் டெல்லி சென்ற முதல்வர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். டெல்லியில் சோனியா காந்தியின் இல்லத்தில் இந்த சந்திப்பானது நடைபெற்று வருகிறது. நிதி ஆயோக் கூட்டத்தின் இடையே பிரதமர் மோடியை சந்திக்கவும் முதல்வர் நேரம் கேட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுபற்றி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், “சோனியா காந்தி, சகோதரர் ராகுல் காந்தியை தில்லியில் ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும் நெருக்கமானதாகத் தோன்றுகிறது. இது சந்திப்பு போல இல்லாமல், உண்மையிலேயே குடும்பத்துடன் இருப்பது போன்ற உணர்வை அளிக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.