பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை!

நிதி ஆயோக் கூட்டத்துப் பின்னர் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தினார்.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று (மே 24) நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பின்னர், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:-

நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழகத்துக்கு என்னென்ன செய்ய வேண்டும், என்ன நிலுவை உள்ளது என்பதை பட்டியலிட்டு பேசியுள்ளேன். குறிப்பாக, பள்ளிக் கல்வித்துறையில் தமிழகத்துக்கு விடுவிக்க வேண்டிய எஸ்எஸ்ஏ நிதி, கோவை, மதுரைக்கான மெட்ரோ திட்டங்கள், அங்குள்ள விமான நிலையங்களை விரிவாக்கம் செய்தல், சென்னையில் பறக்கும் ரயில் திட்டத்தை மெட்ரோ ரயிலிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன்.

மேலும், செங்கல்பட்டு – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையை 8 வழிச்சாலையாக்க வேண்டும். கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் சாதிப்பெயர் விடுதிகளை மாற்றுவது, கிறிஸ்தவராக மாறிய ஆதிதிராவிடர்களை பட்டியலினப் பிரிவில் சேர்ப்பது, இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்ட்ட இந்திய மீனவர்கள் மற்றும் படகுகளை மீட்பது போன்ற கோரிக்கைகளையும் வைத்துள்ளேன். நிதி ஆயோக் கூட்டம் முடிந்ததும், பிரதமரை சந்திக்க நேரம் கேட்கப்பட்டிருந்தது. அங்கேயே அவர் 5 நிமிடம் நேரம் அளித்தார். அப்போதும் இதே கோரிக்கைகளை வலியறுத்தினேன்” என்றார்.

அப்போது செய்தியாளர்கள் உங்கள் கோரிக்கைகளுக்கு பிரதமர் என்ன பதில் கூறினார்? என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த முதல்வர், “அவர் செய்ய மாட்டேன் என்றா கூறுவார். செய்வேன் என்றுதான் தெரிவித்தார். போகப் போக பார்ப்போம்,” என்றார்.

தொடர்ச்சியாக நீங்கள் கோரிக்கை வைத்தாலும், சட்டப்போராட்டம் நடத்தியே பெற வேண்டியுள்ளது, தற்போது நம்பிக்கை உள்ளதா என்ற கேள்விக்கு, “ஏற்கெனவே மெட்ரோ ரயில் திட்டத்துக்கு சேர வேண்டிய நிதியை நிறுத்தி வைத்திருந்தனர். அப்போது நான் நேரில் சென்று வலியுறுத்தியதும் செய்து கொடுத்தார். அதை நினைவுபடுத்தி நன்றி கூறிய போது ‘நீங்கள் வந்து சொன்னதால் செய்தேன்’ என்றார். அதேபோல் இப்போது சொல்லியதையும் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளேன்” என்று கூறினார்.

தமிழகம் கோரிய கல்வி நிதி கிடைக்குமா என்ற கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின், “நம்பிக்கையுடன் இருப்போம்,” என்று பதிலளித்தார். அமலாக்கத்துறை மீதான உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, “நீதிபதி நியாயமான தீர்ப்பைதான் தான் கூறியுள்ளார்” என்றார். பல மாநிலங்களைத் தொடர்ந்து, தமிழகத்திலும் அமலாக்கத் துறையால் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படுகிறதே என்ற கேள்விக்கு, “இது அரசியல் ரீதியாக நடைபெறுவது. அதை எப்படி சந்திக்க வேண்டுமோ அப்படி சந்திப்போம்” என்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் நீங்கள் டெல்லி வந்ததை விமர்சித்துள்ளாரே என்ற கேள்விக்கு, “நான் வெள்ளைக் கொடி காட்டப்போவதாக பழனிசாமி கூறியுள்ளார். என்னிடம் வெள்ளைக் கொடியும் இல்லை. அவரிடம் உள்ளது போல் காவிக் கொடியும் இல்லை” என கூறினார்.

சோனியா, ராகுல் காந்தியுடனான சந்திப்பின் போது கூட்டணி குறித்து பேசப்பட்டதா என கேட்கப்பட்ட கேள்விக்கு, “அது மரியாதை நிமித்தமான சந்திப்பு. எப்போது டெல்லி வந்தாலும் சந்திக்காமல் போவதில்லை. அதேபோல் சந்தித்துள்ளேன். அதே நேரம் அரசியலும் பேசினோம். இல்லை எனக் கூறவில்லை” என்றார்.

டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல், மணல் குவாரி விவகாரத்தில் ரூ.5 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளதாக சொல்லி வருகிறார்களே என்ற கேள்விக்கு, “அதெல்லாம், பொய், பித்தலாட்டம். தேவையில்லாமல் பிரச்சாரம் செய்கின்றனர்” என்றார். இந்தக் குற்றச்சாட்டை துறை அமைச்சர்கள் மறுத்து வருகிறார்களா என்ற கேள்விக்கு, “துறை அமைச்சர்கள் இவற்றை எல்லாம் மறுத்து வருகின்றனர். அவர்கள் திட்டமிட்டு செய்கின்றனர். தேர்தல் நெருங்க நெருங்க இ்ன்னும் செய்வார்கள். எதையும் சந்திக்க தயாராக இருக்கிறோம்” என்று முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார்.