நாட்டின் தனிநபர் வருமான உயர்வை பொறுத்தவரை, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 10 ஆண்டு கால உயர்வைவிட, காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 10 ஆண்டு கால உயர்வு அதிகம் என்று முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:-
இந்தியாவின் தனிநபர் வருமானம் 2013-14-ஆம் ஆண்டில் 1438 அமெரிக்க டாலர்களிலிருந்து 2024-இல் 11 ஆண்டுகளில் 2880 அமெரிக்க டாலர்களாக இரட்டிப்பாகியுள்ளது என்று நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி ஊடகங்களுக்குத் தெரிவித்தார். பொதுவாகப் பார்க்கும்போது அவர் சொன்னது சரிதான், நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இருப்பினும், அவர் முழு தகவல்களையும் கொடுத்திருக்க வேண்டும்.
சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையின்படி, இந்தியாவில் தனிநபர் வருமானம் என்பது 2003-ல் USD 543 ஆகவும், 2013ல் USD 1438 ஆகவும் இருந்தது. 2023-ல் இந்தியாவின் தனிநபர் வருமானம் USD 2711 ஆகவும், 2024-ல் USD 2878 ஆகவும் இருந்தது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் கீழ், தனிநபர் வருமானம் 10 ஆண்டுகளில் இரட்டிப்பாகியது. உண்மையில் இது 2.64 மடங்கு.
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தின் கீழ், தனிநபர் வருமானம் 10 ஆண்டுகளில் இரட்டிப்பாகவில்லை. உண்மையில் அது 1.89 மடங்கு. அதேநேரத்தில், 11 ஆண்டுகளில் தனிநபர் வருமானம் இரட்டிப்பாகியது. இரண்டு அரசாங்கங்களின் சாதனையில் நான் மகிழ்ச்சியடைகிறேன், ஆனால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கால சாதனையில் சற்று கூடுதல் மகிழ்ச்சியை அடைகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.