“ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கருணாநிதி ஆதரித்தார். ஆனால் முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கிறார். திமுக இரட்டை வேடம் போடுகிறது” என ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை திருவான்மியூரில் தமிழக பாஜக சார்பில் இன்று நடைபெற்ற ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டக் கருத்தரங்கில் ஆந்திர துணை முதல்வரும், ஜன சேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் பங்கேற்றார். அவருக்கு தமிழக பாஜக சார்பில் வேல் வழங்கப்பட்டது. இந்தக் கருத்தரங்கில் பவன் கல்யாண் பேசியதாவது:-
ஒரே நாடு , ஒரே தேர்தல் குறித்து பொய்யான தகவல்கள் பரப்பப்படுகிறது. தேர்தல் நேரத்தில் ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெற்றால் தேர்தல் நேர்மையான முறையில் நடைபெற்றதாக சொல்வார்கள். அதே சமயம் தாங்கள் தோல்வியடைந்தால் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்திருப்பதாக குற்றம்சாட்டுவார்கள்.
அதேபோல ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்திலும் சிலர் இரட்டை வேடம் போடுகின்றனர். அந்தக் காலத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டு வந்தால் அது சூப்பர். இப்போது கொண்டு வந்தால் மோசம் என்கின்றனர். இதைப் பார்க்கும்போது “மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம்” என்ற பழமொழி தான் ஞாபகம் வருகிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் இந்தியாவுக்கு புதிதல்ல. தமிழகத்திற்கும் புதிது அல்ல. 1952 ஆம் ஆண்டு முதல் அடுத்த 20 ஆண்டுகளுக்கு நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தான் தேர்தல் நடைபெற்றது. அதன்பின்னர் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஓரிடத்தில் தேர்தல் நடந்து கொண்டே இருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிராக திமுகவும் இந்தியா கூட்டணியினரும் கருத்து தெரிவிக்கின்றனர். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என திமுக பொய் பிரச்சாரம் செய்தது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை முதலமைச்சர் ஸ்டாலின் மறுபரிசீலனை என்ன செய்ய வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கருணாநிதி ஆதரித்தார். ஆனால் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கிறார். நெஞ்சுக்கு நீதியில் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கருணாநிதி ஆதரித்து குறிப்பிட்டுள்ளார். இப்போது திமுக இரட்டை வேடம் போடுகிறது.
நானும் தென் மாநிலத்தைச் சேர்ந்தவன் தான். என்னால் முதலமைச்சர் ஸ்டாலின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. இந்தி திணிப்பு, மும்மொழிக் கொள்கை, ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் சில கவலை இருக்கலாம். அதைப் போக்க வேண்டும். நான் ஒன்றும் தேசியக் கட்சியை சேர்ந்தவன் அல்ல, நானும் உங்களை போல பிராந்திய கட்சியைச் சேர்ந்தவன் தான்.
2019-ஆம் ஆண்டில் தேர்தலின் போது நான் மிகப்பெரிய இழப்பை சந்தித்தேன். நமது தனிப்பட்ட அரசியல், தேசத்தின் வளர்ச்சியை ஒருபோதும் பாதிக்க கூடாது. நமது கருத்து பொதுமக்களிடையே நிலைத்தன்மையை உருவாக்க வேண்டும். மாறாக நிலையற்ற தன்மையை ஏற்படுத்தக் கூடாது.
ஆகையால் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது முடிவை மறுபரீசிலனை செய்ய வேண்டும். தமிழக முதலமைச்சர் தனது கோரிக்கைகளை மத்திய அரசிடம் பேசிக் கொள்ளலாம். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆதரவளிக்க வேண்டும். அப்போதுதான் இந்த திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் அரசியல் சீர்திருத்தம் மட்டுமல்ல, இது பொருளாதார சீர்திருத்தம். இது ஒரு நிர்வாக சீர்திருத்தம், ஆட்சி சீர்திருத்தமும் கூட. முக்கியமாக தமிழ்நாட்டுக்கு தேவையான சீர்திருத்தம். ஒரே நாடு ஒரே தேர்தல் காலத்தின் கட்டாயம் இதை நாம் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.