தமிழகம் பெரியார் மண் அல்ல என்றும் இது எப்போதுமே ஆன்மீக பூமி என்றும் முன்னாள் ஆளுநரும் தமிழக பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
சென்னை திருவான்மியூரில் உள்ள ராமசந்திரா கன்வென்ஷன் சென்டரில் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-
ஒரே நாடு ஒரே தேர்தல் பிரதமர் மோடியின் கனவு திட்டமாகும். ஒரு தேர்தல் நடத்த ரூ 10 ஆயிரம் கோடி செலவாகிறது. மாநில தேர்தலுக்கு 1000 கோடி செலவு. இந்த செலவை குறைக்கத்தான் ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வரப்படுகிறது. ஆனால் இந்த நல்ல திட்டத்திற்கு வேண்டுமென்றே அரசியல் காரணத்திற்காக திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. தமிழகம் பெரியாரின் மண் அல்ல. பெரியாழ்வார் வாழும் மண். தமிழகம் அண்ணா மண் இல்லை. ஆண்டாளின் மண். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் தமிழிசை கூறியதாவது:-
ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்தலாம். அது எந்த அளவுக்கு மக்களுக்கு பயன் தரும். இதன் மூலம் ஒரு நிலையான அரசாங்கம் இருக்கும். திட்டங்களை கொடுப்பதில் எந்தவொரு இடையூறும் இருக்காது என்பது உள்ளிட்ட கருத்துகளை முன்னெடுத்து செல்வதற்காக நாடு முழுவதும் கூட்டங்கள், கருத்தரங்குகளை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இது பாஜக சார்பாக நடத்தப்படும் கூட்டம் இல்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற தனிக்கருத்தை பரப்புவதற்கான கூட்டமாகும். அதன் ஒரு பகுதியாக சென்னை திருவான்மியூரில் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
அடிக்கடி தேர்தல் வந்தால் அது நல்லதல்ல, 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் வந்தால்தான் நல்லது. தமிழகத்தில் திமுக எதைக் கொடுத்து எப்படி ஓட்டுகளை வாங்குகிறார்கள் என்பதை பார்த்திருக்கிறேன். வெற்றி பெற்றவர்கள் எல்லோரும் திறமையாளர்கள் என சொல்லிவிட முடியாது. தோல்வியடைந்தவர்கள் எல்லோரும் திறமையற்றவர்கள் என கூறிவிட முடியாது. தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருகிறது.
கடந்த 4 ஆண்டுகளில் எல்லா விதத்திலும் தோல்வி அடைந்த அரசாக திமுக ஆட்சி இருக்கிறது. மக்கள் நிச்சயம் 2026 ஆம் ஆண்டு பதிலளிப்பார்கள். இவ்வாறு தமிழிசை கூறினார்.